மயில்சாமி ஒரு இளிச்சவாயன்.. மேடையில் வெளிப்படையாக பேசிய விவேக்.. இவ்ளோ விஷயம் பண்ணியிருக்காரா?
சென்னை: திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜிலேபியை சந்திரபாபு நாயுடு மாற்றிவிட்டார் என தூள் படத்தில் விவேக்கிடம் மயில்சாமி செய்யும் மாஸ் காமெடியை யாராலும் மறக்க முடியாது.
டான்ஸ் சாமியர் மற்றும் அந்த காக்கைச் சித்தராக மயில்சாமி மற்றும் விவேக் மீனா நடிப்பில் வெளியான பாளையத்து அம்மன் படத்தில் அட்ராசிட்டி செய்திருப்பார்கள்.
சினிமா விழா ஒன்றில் நடிகர் மயில்சாமியின் கொடை உள்ளத்தை பற்றி மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் பேசிய வீடியோவை மயில்சாமி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்

திருப்பதி லட்டு காமெடி
காமெடி நடிகர் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி. சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் விவேக்கை ஏமாற்றும் அவரது அசிஸ்டன்ட்டாக மயில்சாமி நடித்திருப்பார். ரீமா சென் கடக ராசியை ஆங்கிலத்தில் சொல்ல அவருக்கு கேன்சர் என தப்பாக விவேக் புரிந்து கொண்டார் என்பதை பயன்படுத்தி திருப்பதிக்கு போயிட்டு வந்தேன் என ஜிலேபியை விவேக்கிடம் கொடுக்கும் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் இருந்திருக்கவே மாட்டார்கள். சிங்கப்பூர் முருகனை சந்திக்க கிளம்புறேன் என சொல்லி கிளம்ப விவேக்கிடம் சிக்கி அடிவாங்கும் காட்சிகள் வேறலெவல் காமெடி.

டான்ஸ் சாமியார் vs காக்கைச் சித்தர்
பாளையத்து அம்மன் படத்தில் விவேக் காக்கைச் சித்தர் எனும் கதாபாத்திரத்திலும் மயில்சாமி டான்ஸ் சாமியார் எனும் ரோலிலும் நடித்திருப்பார்கள். அந்த டிவி பேட்டி காட்சி இப்போது பார்த்தாலும், ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தும். இருவரும் கூட்டாக டிவிக்கு முன் மட்டும் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பல மோசடி பேர் வழிகளை துவைத்து எடுக்கும் காட்சியாகவே அமைந்தது.

இளிச்சவாயனா நல்லவனா
காமெடி நடிகர் விவேக் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மயில்சாமியின் கொடை உள்ளத்தை பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. இவன் இளிச்சவாயானா நல்லவனா என்றால் இளிச்சவாயன்/நல்லவன்னு தான் சொல்லணும். இப்படியொரு மனுஷன் நம்முடன் வாழ்வதே பெரிய விஷயம். பாரதிராஜா கிட்ட இவன பத்தின விஷயங்களை சொன்னால், மயில்சாமி பண்ண செயல்களை வைத்தே ஒரு படத்தை எடுத்திடுவார் என பேசி உள்ளார்.

தங்க செயினை தானமாக கொடுத்தார்
சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்வதை அறிந்த மயில்சாமி அங்கே சென்று தான் ஆசையாக எம்ஜிஆர் பதக்கம் போட்டு அணிந்திருந்த தங்க செயினை விவேக் ஓபராய் கழுத்தில் போட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாம வந்துட்டார். கொஞ்சம் நின்னு இருந்தா அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான் என நகைச்சுவையாக விவேக் மயில்சாமியை பற்றி பேசியது ரசிகர்களை உருக வைத்துள்ளது.

ஒரு நாள் பணக்காரன் ஒரு நாள் பிச்சைக்காரன்
ஒரு 10 ஆயிரம் ரூபாய் வந்தா கஷ்டப்படுறங்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு கடைசியில என் கிட்ட வந்து ஆட்டோக்கு போகணும் ஒரு 50 ரூபாய் கொடு மச்சான்னு கேப்பான். ஒரு நாள் பணக்காரனா இருப்பான். ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான். அதுதான் மயில்சாமி.

பாரதியார் போல
வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு காக்கை குருவி எங்கள் சாதி என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, மயில்சாமியும் அப்படித்தான் என விவேக் பேசிய த்ரோபேக் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மயில்சாமி இப்படிப்பட்ட மனிதரா என விவேக்கின் பேச்சு மூலம் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications