Na.Muthukumar - உங்கள் பயணம் எப்போதும் முடிவதில்லை... பிறந்தநாள் வாழ்த்துகள் நா. முத்துக்குமார்
சென்னை: Happy Birthday Na. Muthukumar (பிறந்தநாள் வாழ்த்துகள் நா. முத்துக்குமார்) பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துக்குமாரின் 48ஆவது பிறந்தநாள் இன்று.
பாடல் எழுதுவதை விட கடினமானது பாடலை எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது. அப்படி பாடல் எழுதியவர்களும், எழுதுபவர்களும்தான் இப்போதுவரை எல்லோராலும் ரசிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் நா. முத்துக்குமார் முக்கியமானவர். வாலியும், வைரமுத்துவும் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் நா.முத்துக்குமார்.

எளிமை படை: ஒரு கவிஞனுக்கு எளிமை எப்போதும் பலமாக இருக்கும். அந்த எளிமை படைதான் அவருக்கு அசைக்க முடியாத சிம்மாசனத்தை மக்கள் மத்தியில் பெற்று தரும். அந்த எளிமை படை நா. முத்துக்குமாருக்கு இயல்பாகவே அமைந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனெனில் சிறு வயதிலிருந்தே அவருக்கு துணையாக இருந்ததில் எளிமைக்கு முக்கிய இடம் உண்டு. ஏனெனில் அவரது தந்தையும் அவ்வளவு எளிமையானவர்.
மேஜிக்கை நிகழ்த்தியவர்: சிறு வயதில் பார்த்த விஷயங்களை ஒரு படைப்பாளி தனது ஆரம்பகால படைப்புக்குள் வைப்பது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அதன்படிதான் தன்னுடைய தொடக்க கால பாடல்களை எழுதினார் முத்துக்குமார். அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திய பாடல் காதல் கொண்டேனில் வரும் தேவதையை கண்டேன் பாடல். அதில் தனிமைக்கு இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், 'தனி தீவில் கடை வைத்தேன். மணல் வீடு கட்டி வைத்தேன். இதைவிட ஒரு தனிமையை யாரேனும் எளிதாக சொல்லிவிட முடியுமா.
அதேபோல் நேசத்துக்குரிய ஒரு உயிரை யார்தான் பிரிய நினைப்பார்கள். யாருக்குத்தான் அந்த உயிர் மீது கோபம் வரும். இந்த உணர்வை எழுதுவதற்கு எவ்வளவோ கவிநயத்தை முத்துக்குமாரால் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவரோ காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது என எழுதி போகிற போக்கில் பெரும் உணர்வை கடத்தும் வல்லமை கொண்டவர். இப்படி பல மேஜிக்குகளை நிகழ்த்திக்காட்டியவர் நா.முத்துக்குமார்.
ட்ரெண்ட் செட்டர்: நா. முத்துக்குமாரின் சிந்தனை; மழையை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது வெயிலை கொண்டாடியது; தாய் பாசத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது தந்தை பாசத்தை படம் போட்டு காட்டியது; அதேபோல் அக்காவுக்கென்று பெரிதாக இந்த தமிழ் சமூகத்தில் பாடல் இல்லாத சூழலில் கண்ணில் அன்பை சொல்வாளே பாடலில் இவள் போலே இவளைப் போலே...வாழ்வில் நண்பர்கள் இல்லை... மறு ஜென்மம் வந்தால் கூட நாந்தான் இவளின் பிள்ளை என எழுதி அக்காக்களுக்கான கீதத்தை இயற்றினார்.
முக்கியமாக திருநங்கைகள், திருநம்பிகள் குறித்த பாடலும் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இல்லை. அதையும் நா.முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். 'பருவத்தில் பேயாட்டங்கள் பாலின தடுமாற்றங்கள் உருவத்தை. உருமாற்றலாம்; உள்ளத்தை அது மாற்றுமா வேப்பம் மரக்கிளையில் வேறேதோ செடிதான் வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன்' என அவர்களின் உணர்வை அவர்களின் குண மாற்றத்தை நர்த்தகி படத்தில் இடம்பெற்ற பூவின் மணம் பூவில் இல்லை என்ற பாடலில் ஆழமாகவே பேசியிருப்பார் முத்துக்குமார். இதுவரை யாரும் பெரிதாக பேசாத விஷயம் அது.
காத்திரமான அரசியலும் உண்டு: முத்துக்குமார் என்றாலே காதல் பாடல்கள்தான் என்ற பிம்பம் இருக்கிறது. ஆம் அவர் நிறைய காதல் பாடல்களை எழுதியிருக்கிறார். அதேசமயம் அவர் அரசியல், பொது கருத்துக்கள் சார்ந்த பாடல்களையும் எழுதியிருக்கிறார். அவர் எழுதியதிலேயே சென்சிட்டிவான அரசியல் பேசிய பாடல் அல்லாவே எங்களின் தாய் பூமி.
அதில், "எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம் நாணம் கொண்டு அன்று; மரணம் கண்டு இன்று; காஷ்மீரின் ரோஜாக்கள் விதவைகள் பார்த்து அழத்தானா? எங்கு செல்லும் காஷ்மீர் புறாக்கள்" என அந்தப் பாடலில் காஷ்மீருக்காக அவர் கேட்டிருக்கும் கேள்விக்கு எந்த நாட்டு அரசாங்கத்திடமும் பதில் இல்லை.
அதேபோல் அவர் எழுதிய எங்க ஏரியா உள்ள வராத, கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி பாடலில் எல்லாம் நா. முத்துக்குமாரின் அறமான கோபம் அவ்வளவு கொப்பளிக்கும். நா.முத்துக்குமாரை காதல் பாடல்களுக்குள் சுருக்குவதைவிட இந்த ஜானரில் அவர் எழுதியிருக்கும் பாடல்களை கேட்டு அவரை விசாலமாக்க வேண்டும்.

பயணங்களின் காதலர்: நா. முத்துக்குமார் முழுக்க முழுக்க பயணங்களின் காதலர். பயணம்தான் ஒரு மனிதனை மென்படுத்தும் என்பதை கடைசி வரை நம்பியவர். பயணம் என்றால் தெரிந்த இடத்துக்கு செல்வது இல்லை. தெரியாத இடத்துக்கு திடீரென கிளம்பி செல்லக்கூடிய பயணம். ஒருமுறை ஊட்டிக்கு சென்றவர் அங்கு உள்ளத்தீ என்ற பெயர் பலகையை பேருந்தில் பார்த்துவிட்டு இறங்கிவிட்டார்.
அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு மக்களோடு மக்களாக மலைப்பாதையில் ஒரு முன்னிரவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது நிலவு வெளிச்சம் கொடுத்திருக்கிறது. அந்த நிலவை பார்த்தவர் அந்த கணத்திலேயே எழுதினார், 'காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை'. அந்த வரியை 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற கண் பேசும் வார்த்தைகள் பாடலுக்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த வரிக்குஅள் எவ்வளவு ஆழம் இருக்கிறது. வெளிச்சம் கொடுக்கும் நிலவை யாருமே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற இரக்கமும், ஆதங்கமும்தான் அது.
அதேபோல் யாரும் கவனிக்காத அல்லது கவனித்தாலும் நினைவில் ஏற்றிக்கொள்ளாத விஷயங்களை பாடலில் ஏற்றியவர் நா. முத்துக்குமார். உதாரணமாக, மழை நின்றபோதிலும் மரக்கிளைகள் தூறுதே என்ற வரி போதும். மழை நின்ற பிறகு யாரேனும் மரக்கிளைகளை கவனித்திருக்கிறோமா இல்லை நினைவில் வைத்திருக்கிறோமா. கிளைகளையும், இலைகளையும் முத்துக்குமார் ரொம்பவே கவனித்திருக்கிறார். ஏனெனில் கிளையோ, இலையோ யாராலும் பெரிதாக கண்டுகொள்ளப்படாதது.
பறவை பறந்த பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே, வரியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும் என நாம் எளிதாக கடந்து செல்லும் விஷயங்களை வைத்து காதலையும், அழகியலையும், தெம்பையும் ஊட்டியவர் நா. முத்துக்குமார்.
பயணம் முடிவதில்லை: ஒருவர் இறந்துபோனால் அவரது இறப்பு சில நாட்களில் மறந்து அவரது பயணம் முடிந்துவிட்டதாகவே நினைத்துவிடுவார்கள். ஆனால் நா. முத்துக்குமார் எளிமையாக சக தோழன் மேல் கை போட்டு உரையாடுவது போல் ரசிகர்களிடம் பாடல்கள் மூலம் உரையாடினார். அந்த உரையாடல் எப்போதும் யாருக்கும் மறக்காது.அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், பாதை முடிந்த பிறகு இந்த உலகில் பயணம் முடிவதில்லையே.. முடியாத பயணத்தை மேற்கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











