வளையோசையின் 2வது ஓசையும் நின்றது.. பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
சென்னை: இந்தியாவின் பெருமைமிக்க பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய "வளையோசை கலகலவென" பாடலை இசையுலகம் உள்ளவரை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
இளையராஜா இசையில் அந்த பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 2020ம் ஆண்டு காலமான நிலையில், அவருடன் இணைந்து அந்த பாடலை பாடிய லதா மங்கேஷ்கர் தற்போது நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

எந்தன் கண்ணாளன்
1956ம் ஆண்டு தமிழில் வெளியான வான ரதம் படத்தில் இடம்பெற்ற "எந்தன் கண்ணாளன்" பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் லதா மங்கேஷ்கரை பிரபலப்படுத்தியது. 'உரன் கடோலா' எனும் பாலிவுட் படத்தின் டப்பிங் படம் தான் வான ரதம். பாலிவுட் நடிகர் திலீப் குமார் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியில் 1955ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் 9 பாடல்களையும் லதா மங்கேஷ்கர் பாடியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பே
பாடகி லதா மங்கேஷ்கர் 1952-ல் இந்தியில் வெளியான ஆண் திரைப்படம் ‘ஆண் முரட்டு அடியாள்' என்ற டைட்டிலில் தமிழில் டப் செய்து வெளியான படத்தில் ‘இழந்தேன் உன்னை அன்பே', ‘நகரு நகரு', ‘பாடு சிங்கார பாடலை', ‘இன்று எந்தன் நெஞ்சில்' ஆகியப் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நவ்ஷத் இசையில் கம்பதாசன் இந்த பாடல்களுக்கு வரிகள் எழுதியிருந்தார்.

அழைத்து வந்த இளையராஜா
பாலிவுட் பட டப்பிங் படங்களுக்கு பாடி வந்த லதா மங்கேஷ்கரை நேரடியான தமிழ் படத்தில் பாட அழைத்து வந்த பெருமை இசையமைப்பாளர் இளையராஜா ஒருவரை மட்டுமே சேரும். 1987-ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்' என்ற படத்திற்காக மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ' என்ற பாடலைப் பாடினார் லதா மங்கேஷ்கர்.

வளையோசை கலகலவென
கமல்ஹாசன், அமலா நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகலவென பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடியிருந்தார் லதா மங்கேஷ்கர். இன்றளவும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 2020ம் ஆண்டு மறைந்த நிலையில், அதன் இன்னொரு ஓசையான லதா மங்கேஷ்கர் இன்று மறைந்தாலும் அவர்களின் கானக் குரல்கள் என்றும் ரசிகர்கள் மனங்களில் மறையாது.


Click it and Unblock the Notifications











