Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
லதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை!
லதா ரஜினிகாந்துக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என மீடியாஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: கோச்சடையான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தங்களுக்கும், நடிகர் ரஜினியின் மனைவி லதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மீடியாஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினி நடித்த கோச்சடையான் படம் தொடர்பாக ஆட்-ப்யூரோ நிறுவனத்துக்கும், மீடியாஒன் நிறுவனத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மீடியாஒன் நிறுவனத்தின் இயக்குனரான லதா ரஜினிகாந்த், தங்களுக்கு தரவேண்டிய கடன்பாக்கியை தர மறுப்பதாக, ஆட்-ப்யூரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மீடியாஒன் நிறுவனம் பணத்தை திருப்பித்தர உத்தரவிட்டது. லதா ரஜினிகாந்த் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் தங்களுக்கும் லதா ரஜினிகாந்துக்கு தொடர்பில்லை என மீடியாஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மீடியாஒன் நிறுவனத்தின் இயக்குனர் திருமூர்த்தி மோசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம், திருமதி. லதா ரஜினிகாந்த் மற்றும் ஆட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் பற்றி ஊடகங்களில் பல தவறான மற்றும் ஆதாரமற்ற செய்திகள் வெளியாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த சர்ச்சைகள் அனைத்தும் மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஆட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (MOU) மூலம் தொடங்கியது. அந்த உடன்படிக்கைகளின் படி ஆட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து கடன் தொகையாக ரூ. 20 கோடியை மீடியாஒன் நிறுவனம் பெற்று கொண்டது.
ரஜினிகாந்த் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்காக அத்தொகையை கடனாக வாங்கியது மீடியாஒன் நிறுவனம். மேலே கூறப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் கீழ் லதா ரஜினிகாந்த் உறுப்பினர் இல்லை.
மேலும் இந்த உடன்படிக்கைகளின் படி ஆட்-ப்யூரோ விளம்பர நிறுவனத்திற்கு 'கோச்சடையான்' திரைப்படத்தை தமிழ் நாட்டில் மட்டும் விநியோகிப்பதற்கான முழு உரிமையும், உடன் குறைந்தபட்ச உத்திரவாத லாபத்தை கடன் தொகைக்கு ஈடாக எடுத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.
உடன்படிக்கைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட ரூ. 20 கோடியில் ரூ.10 கோடி மட்டுமே முன்பணமாக கொடுத்தது ஆட்-ப்யூரோ நிறுவனம். இதன் காரணமாக 'கோச்சடையான்' திரைப்படம் வெளியாவதில் பல வாரங்கள் தாமதமானது. இன்றைய தேதிபடி மீடியாஒன் நிறுவனம் ரூ. 10 கோடி கடன் தொகையில், ரூ.9.2 கோடி உடன்படிக்கைகளின் படி சரிவர கட்டியுள்ளது. மேலும் ரூ. 80 லட்சத்தை உடன்படிக்கைகளின் படி கட்டவும் உறுதியாய் உள்ளது.
ஆட்-ப்யூரோ நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டும் நவம்பர் மாதம் 11ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் உடன்படிக்கைகளின் ஒப்பந்த மீறலாய், மீடியாஒன் நிறுவனம் மொத்த தொகையாக ரூ. 10 கோடியும், வட்டியாக ரூ.4.30 கோடியும், 6 மாத கால கணக்கின்படி, ஓராண்டிற்க்கான 80% வட்டி விகிதத்தை கட்டுமாறும் கோரப்பட்டது.
இது உடன்படிக்கைகளின் கீழ் ஒவ்வாத கோரிக்கை மட்டுமின்றி, அதிகவட்டி வசூலுக்கு எதிரான சட்டத்துக்கும் புறம்பானதாகும். இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஆட்-ப்யூரோ நிறுவனம், மீடியாஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த்க்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆட்-ப்யூரோ நிறுவனம் பொது வழக்குகளை தொடர்ந்துள்ளது. மீடியாஒன் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது பொய்யாய் புனையப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் புகார் கொடுத்துள்ளது.
லதா ரஜினிகாந்த் மீடியாஒன் குளோபல் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனத்தின் பங்குதாரரோ நிர்வாக இயக்குனரோ இல்லை. மேலும் ஆட்-ப்யூரோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு மீடியாஒன் நிறுவனம் மட்டுமே பொறுப்பாகும் என்பது தெளிவுப்படுத்தபடுகிறது.
மீடியாஒன் நிறுவனம் விவகாரங்களில் லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும் ஆட்-ப்யூரோ நிறுவனத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களையும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.