லீனா மணிமேகலை- சுசி கணேசன் வழக்கில் திருப்பம்!
சென்னை : இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க முழு ஒத்துழைப்பு தருவதாக லீனா மணிமோகலை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு மீடு ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அப்போது, பிரபல இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் மீ டூ குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக,பொய்யான குற்றஞ்சாட்டு எனக்கூறி சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

லீனா மணிமேகலை
இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டி, வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் லீனா வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இழுத்தடித்து வருகிறார்
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், உச்ச நீதிமன்றம் நான்கு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று விதித்த காலக்கெடு ஜூன் மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.

ஒத்துழைப்பதாக பிரமணப்பத்திரம்
காளி பட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்தியா பாதுகாப்பு இல்லாத நாடு என்றும், இந்திய சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும் லீனா மணிமேகலை கூறியுள்ளதை சுட்டி காட்டினார். இந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பினால் கூட ஆஜராக மாட்டார் என்றும், வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக லீனா மணிமேகலை தனது தம்பி பெயரில் பிரமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

காளிபோஸ்டர்
லீனா மணிமேகலை தான் இயக்கிய, காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











