Legend Saravanan: லீடர் அரசியல் படமா? சந்தேகமே வேண்டாம்.. பட்டுனு போட்டு உடைத்த லெஜெண்ட் சரவணன்
சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள லீடர் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு இன்று அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகன் லெஜெண்ட் சரவணன், லீடர் படம் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், " லீடர் படத்தின் டைட்டிலை பார்த்ததும் பலரும் இதை அரசியல் படம் என்று நினைக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ கூட அரசியல் இல்லை. படம் முழுக்க சிறப்பான ஆக்ஷன் படமாகவும் கமர்ஷியல் படமாகவும் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர். இந்த காலத்தில் ரசிகர்களைப் பொறுத்தவரையில் கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அல்லது சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

லீடர் : லீடர் படத்தைப் பொறுத்தவரை படம் முழுக்க கமர்ஷியலாகவும் அதே நேரத்தில் படத்தின் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லும் விதமாகவும் திரைக்கதையை பார்த்து பார்த்து அமைத்துள்ளார், இயக்குநர் துரை செந்தில்குமார். இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படத்தின் முதல் பாடலை வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாகவும், மார்ச் மாதம் 6ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிடவும் ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருவதாக நாயகன் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும்.
சினிமா துறை: அதேபோல் எனக்கு சிறுவயதில் இருந்தே நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனது வீட்டு பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாரூக் கான் மறுபக்கம் சல்மான் கான் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பேன். நானும் ஒரு நாள் நடிகராவேன் என்று எனது அம்மாவிடம் சொல்லும் போது அவர் சிரிப்பார். சினிமா துறை இன்றைக்கு சரிவில் உள்ளது. ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால் அது ஒரு படத்தின் வெற்றியோ அல்லது ஒரு நபரின் வெற்றியோ இல்லை. மாறாக அது பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வெற்றி. சினிமா துறை மீண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்" என்று பேசினார்.



Click it and Unblock the Notifications











