மனோரமா மகனுக்கு திரை வாழ்வும் சரியில்லை திருமண வாழ்வும் சரியில்லை.. பிரபலம் பகிர்ந்த பகீர் விஷயம்
சென்னை: ஆச்சி என்ற அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு பூபதி என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். சில படங்களில் நடித்த அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
சினிமாவில் 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர் ஆச்சி மனோரமா. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறிவிடும் திறமை கொண்ட அவர் பெண் சிவாஜி என்று புகழப்பட்டவர். சிவாஜியேகூட ஆச்சியின் நடிப்பை பார்த்து மிரண்டு போனதெல்லாம் உண்டு. எம்ஜிஆர் - சிவாஜி தொடங்கி விஜய் - அஜித் தலைமுறைவரை பிஸியாக நடித்துவந்த அவர் கடந்த 2015ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
மகன் பூபதி: இதற்கிடையே தன்னுடன் நாடகத்தில் பணியாற்றிய ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார் ஆச்சி. அவர்களுக்கு பூபதி என்ற மகனும் இருந்தார். குழந்தை பிறந்த இரண்டு வாரங்களிலேயே மனைவியை விட்டு பிரிந்தார் ராமநாதன். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போன கணவருக்கு எதிராக வாழ்ந்து காட்ட வேண்டும், மகனை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று சபதம் எடுத்து வாழ்ந்தவர் ஆச்சி.

நினைத்தபடி இல்லை: முதலில் மகனை மருத்துவராக்க நினைத்தார். ஆனால் அது சரியாக வரவில்லை. அதனையடுத்து தனது வழியிலேயே திரைத்துறையில் வெல்ல வைக்க நினைத்தார். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள், விசு இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் பூபதி நடித்தாலும் நினைத்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் மகனுக்காக தூரத்து சொந்தம் என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். அதுவும் தோல்விதான்.
உயிரிழந்த பூபதி: எவ்வளவு முயன்றாலும் சினிமா கைகொடுக்காததால் ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார் பூபதி. தன்னை சூழ்ந்திருந்த விரக்தியால் குடிக்கு அடிமையானார். சூழல் இப்படி இருக்க நேற்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். திரைத்துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது வீடியோவில் பூபதி பற்றி பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு பேச்சு: அவர் அந்த வீடியோவில், "மகன் மீது மனோரமாவுக்கு அவ்வளவு பாசம். எப்படியாவது சினிமாவில் வெல்ல வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக படமெல்லாம் தயாரித்தார். இது ஒருபக்கம் இருக்க பூபதி முதலில் காதல் திருமணம்தான் செய்தார். தன்னை போலவே தனது மகனும் காதல் திருமணம் செய்து கஷ்டப்பட வேண்டாம் என்று மனோரமா அதை எதிர்த்தார். பிறகு பூபதிக்காக ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தபடியே அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. அது ஆச்சிக்கு பெரிய சோகத்தை கொடுத்தது. பிறகு இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைத்துவிட்டார். அந்த திருமண வாழ்க்கை நல்லபடியாக போனது. மனோரமாவின் மகன் மருத்துவராக முடியாவிட்டாலும் அவரது பேரன் ஆகிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











