காதல் தோல்வி.. பணம், புகழ் இருந்தும் இரண்டாம் தாரமான வைஜெயந்திமாலாவின் கண்ணீர் கதை!
சென்னை: தற்போதையே தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அனைவரின் நினைவுக்கு வருவது நயன்தாரா தான். ஆனால், அந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் தனது 15வது வயதிலேயே கொடிகட்டி பறந்த முதல் லேடி சூப்பர் ஸ்டார் வைஜெயந்தி மாலா தான். அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார். அவர் சந்தித்த காதல் தோல்வி முதல் திருமணம் வரை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தவர் தான் வைஜெயந்தி மாலா. இவரது தாயார் வசுந்தராதேவியும் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை. இவரது தந்தை எம். டி. ராமன். சுட்டித்தனமான பெண்ணான வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, சர்ச் பார்க் ஆகிய பள்ளிகளில் படித்துள்ளார்.

வைஜெயந்தி மாலா: பரதநாட்டியத்தின் போது ஈடுபாடு கொண்ட வைஜெயந்தி மாலா பரதநாட்டியத்தை கற்று வந்தார். தனது 13 வது வயதில் அரங்கேற்றம் நடைபெற்ற போது, அந்த விழாவிற்கு வந்த ஏவிஎம் செட்டியார் வைஜெயந்தி மாலாவின் அழகை பார்த்து வியந்து போனார். அதன் பின், தனது தயாரிப்பில் வெளியான திரைப்படத்தில் அவரை நடிகையாக ஒப்பந்தம் செய்தார். 1949 ஆம் ஆண்டு வெளியான வாழ்க்கை என்ற திரைப்படத்தில் வைஜயந்தி மாலாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். 13 வயதிலேயே கதாநாயகியாக வைஜெயந்தி மாலா நடித்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.
ஸ்டார் நடிகையாக மாறினார்: வாழ்க்கை படத்தின் வெற்றியால், ஏவிஎம் நிறுவனத்திற்கு பணம் பல வழிகளில் கொட்டியதால், அந்த திரைப்படத்தை தெலுங்கிலும் ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. தெலுங்கு திரைப்படத்திலும் வைஜெந்தி மாலாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால், வைஜெயந்தி மாலா ராசியான நடிகை என பெயர் எடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தது ஏவிஎம் நிறுவனம். இந்தியிலும், வைஜெயந்தி மாலாவே கதாநாயகியாக நடித்திருந்தார். தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகை என பெயர் எடுத்தார்.
காதல் தோல்வி: தனது 15வது வயதிலேயே இந்திய சினிமா கொண்டாடும் நடிகையாக மாறிப்போன வைஜெயந்தி மாலா தமிழில் ஜெமினி கணேசனுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன், தேன் நிலவு போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்ததால், அவர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக அவர் பாலிவுட் சென்றுவிட்டதால், ஜெமினி கணேசன் மீதான காதலை தெரியப்படுத்த முடியாமல் போனது. பின் திலீப்குமாரை காதலித்தார். அந்த காதலும் கைகூடாமல் போனது.

குடும்பத்தை பிரித்தார்: அதைத்தொடர்ந்து, வைஜெயந்தி மாலாவுக்கும் ராஜ்கபூருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பல செய்திகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் பரவியதால், ராஜ்கபூரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருவருக்கும் இடையே காதல் இல்லை, நட்பு தான் என பலமுறை எடுத்து சொல்லியும் பத்திரிகைகளில் இவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருந்ததால், ராஜ்கபூரின் குடும்ப மருத்துவரான சமன்லால் பாலியை 1968 ஆண்டு திருமணம் செய்து கொண்டார் வைஜெயந்தி மாலா.
இரண்டாவது மனைவி: இது வைஜெயந்தி மாலாவிற்கு முதல் திருமணம் என்றாலும், சமன்லால் பாலிக்கு இது இரண்டாவது திருமணம். வைஜெயந்திமாலாவை முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சமன்லால் பாலி தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு வைஜெந்திமாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மும்பையில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த வைஜெயந்திமாலா தற்போது வரை சென்னையில் தான் வசித்து வருகிறார். வைஜெயந்திமாலா மாலாவின் கணவர், சமன்லால் பாலி 1986 ஆம் ஆண்டு உயிரிழந்தார். வைஜெயந்தி மாலாவின் ஒரே ஒரு மகன் சுசித்ரா பாலி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வைஜெந்தி மாலாவிற்கு 92 வயது ஆகிறது. கடந்த மார்ச் மாதம் வைஜெயந்தி மாலா இறந்துவிட்டதாக பரவிய வதந்தி அவரது மகன் மறுத்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











