திடீர் மாரடைப்பு.. பிரபல ஆர்ட் டைரடக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி மரணம்.. பாரதிராஜா உருக்கம்!
சென்னை: பிரபல ஆர்ட் டைரடக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் இவர்.
ஜி.வி.அய்யர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.

கலை இயக்குனர்
தமிழில், நாடோடி தென்றல், வண்ண வண்ணப்பூக்கள், தாஜ்மஹால், தெனாலி, அழகி, பாரதி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, நான் கடவுள் உட்பட பல படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவர் கலை இயக்கம் கவனிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், காஷ்ட்யூம் டிசைனராகவும் புரொடக்ஷன் டிசைனராகவும் பணியாற்றினார்.

மத்வச்சாரியா
ஜி.வி.அய்யரின் மத்வச்சாரியா என்ற கன்னட படத்துக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றியதற்காக, முதல் தேசிய விருதை பெற்றார். இதையடுத்து அவருக்கு மலையாளப்பட வாய்ப்புகள் வந்தன. அங்கு முன்னணி இயக்குனர்களான லெனின் ராஜேந்திரன் உட்பட பலருடன் இணைந்து பணியாற்றினார்.

திடீர் மாரடைப்பு
சிறந்த கலை இயக்கத்துக்காக மூன்று முறையும் சிறந்த காஷ்ட்யூம் டிசைனுக்காக இரண்டு முறையும் தேசிய விருது பெற்றுள்ளார். இது தவிர, தமிழக மற்றும் கேரள அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் தனது மனைவி ராஜலட்சுமியுடன் வசித்து வந்த இவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

ட்விட்டரில் பாரதிராஜா
இதையடுத்து அவர் மரணமடைந்தார். அவர் மறைவு, திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான திரையுலகினர் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கலும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நம்ப முடியா ஒன்று
அவருடைய இரங்கல் செய்தியில், என் கலைத்துறையில் என் கண்களில், என் இன்னொரு உணர்வை இழந்திருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தியின் மறைவு நம்ப முடியா ஒன்று. வாடிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மறைந்த கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று 12 மணியளவில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications