பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன்.. பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.
Recommended Video
பழம்பெரும் இயக்குனர் பீம் சிங்கின் மகன் பி.கண்ணன். பிரபல ஒளிப்பதிவாளரான இவர், எடிட்டர் லெனினின் மூத்த சகோதரர்.
தமிழில் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர்.

முதல் மரியாதை
நான் கேமராவுக்கு பதில் கண்ணனின் கண்களைத்தான் எடுத்துச் செல்கிறேன் என்று அவர் குறிப்பிடும் ஒளிப்பதிவாளர் இவர். பாரதிராஜா இயக்கிய நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, வேதம்புதிது , புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சாந்தாராம் விருது
தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் இனியவள் உறங்கட்டே, யாத்ர மொழி உட்பட சில படங்களுக்கும் தெலுங்கில் ஆராதனா உட்பட சில படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு அரசின் விருதுகளை இரண்டு முறை பெற்றுள்ள இவர், கடல் பூக்கள் படத்துக்காக சாந்தாராம் விருதை பெற்றுள்ளார்.

கவலைக்கிடமாக
கடந்த சில வருடங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சை முடிந்த நன்றாக இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று காலை கூறப்பட்டது. வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்தார்.

திரைத்துறை
இதையடுத்து தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மறைந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுக்கு காஞ்சனா என்ற மனைவியும் மதுமதி, ஜனனி என்ற மகளும் உள்ளனர். ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனஞ்செயன்
தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'எங்களது பாஃப்டா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ஒளிப்பதிவாளர் பிரிவின் ஹெச்.ஓ.டியாக இருந்தவர் பி. கண்ணன். எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். எளிமையானவர் சுமார் 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் மறைவு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்துள்லது. ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











