கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் 82 வது பிறந்தநாள் ஸ்பெஷல்...இந்த விஷயமெல்லாம் இதுவரை தெரியலியே
சென்னை : பின்னணி பாடகராக, இசையமைப்பாளராக அனைவரின் மனதையம் கவர்ந்தவர் கே.ஜே.யேசுதாஸ். கானகந்தர்வன் என அனைவராலும் போற்றப்படும் யேசுதாஸ் இன்று தனது 82 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கிட்டதட்ட 60 ஆண்டுகால இசை பயணத்தில் கர்நாடக இசை பாடல்கள், ஆன்மீக பாடல்கள், சினிமா பாடல்கள் என ஏறக்குறைய 80,000 க்கும் அதிகமான பாடல்களை பாடி இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார்.
இசைத்துறையில் பல சாதனைகள் படைத்த யேசுதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரைப் பற்றிய பலரும் அறியாத சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கொல்லூர் தரிசனம்
ஒவ்வொரு பிறந்த நாளன்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதும், மனமுறுக பாடுவதும் யேசுதாஸ் பல ஆண்டுகளாக கடைபிடிக்கும் பழக்கமாகும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதல் முறையாக கடந்த ஆண்டு தான் அவர் கொல்லூர் செல்லவில்லை. மாறாக அமெரிக்காவிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

எட்ட முடியாத சாதனை
யேசுதாஸ் இதுவரை 8 முறை தேசிய விருதுகளையும் 43 முறை மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இத்தனை அதிகமான தேசிய விருதுகளை இதுவரை வேறு எந்த பாடகரும் பெறவில்லை. இது தவிர பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார் யேசுதாஸ்.

யேசுதாஸ் பெயரில் விருது
இசை உலகிற்கு யேசுதாஸ் அளித்த பங்களிப்பை பாராட்டி அவருக்கு பல விருதுகள் அளிக்கப்பட்டிருப்பதை போல் இளம் இசை கலைஞர்களை பாராட்டும் வகையில் யேசுதாஸ் பெயரால் ஸ்வர்ண கைரளி யேசுதாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கேரள அரசு தந்த கெளரவம்
யேசுதாசின் இசை சாதனைகளை பாராட்டி கேரள அரசு இவருக்கு கேரள அரசின் ஆஸ்தான கயகான் விருதினை வழங்கி கெளரவித்துள்ளது. நாட்டில் வேறு எந்த பாடகரும் இந்த விருதினை இதுவரை பெற்றதில்லை.

சபரிமலையில் யேசுதாஸ் இசை
சபரிமலையில் நாள்தோறும் இரவு நடை சாற்றப்படுவதற்கு முன் ஒலிக்கப்படும் ஹரிவராசனம் பாடல் யேசுதாசால் பாடப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு தாலாட்டு என சொல்லப்படும் ஹரிவராசனம் பாடல் இன்று வரை யேசுதாஸ் குரலில் சபரிமலையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் யேசுதாஸ் இசை
இந்திய மொழிகளில் மட்டுமல்ல ஆங்கிலம், ரஷ்யா போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் யேசுதாஸ் பாடி உள்ளார். பஞ்சாபி, அசாமி, கொங்கனி, காஷ்மீரி மொழிகளிலும் பல பாடல்களை யேசுதாஸ் பாடி உள்ளார்.

முறியடிக்க முடியாத சாதனை
2006 ல் ஒரே நாளில் 4 மொழிகளில் 16 படங்களுக்கு யேசுதாஸ் பின்னணி பாடி உள்ளார். இந்த சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











