Leo FDFS: “டிக்கெட் கேட்டு மிரட்டல்..” காலை 9 மணிக்கு மேல் லியோ FDFS... அடுத்தடுத்து பஞ்சாயத்து!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் நாளை முதல் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி காட்சி உறுதியாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் காலை 7 மணிக்கு முதல் காட்சி என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அங்கும் 9 மணிக்கு மேல் தான் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

லியோ டிக்கெட் கேட்டு மிரட்டல்
விஜய்யின் லியோ திரைப்படம் நாளை (அக்.19) முதல் ரிலீஸாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU-ன் கீழ் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவுள்ளன.
லியோ தமிழ் மட்டுமின்றி பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, டெல்லி போன்ற மாநிலங்களில், அதிகாலை 4 மணிக்கு லியோ FDFS என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு லியோ FDFS திரையிடப்படவுள்ளதாம். அதேபோல், வெளிநாடுகளிலும் லியோ படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு என சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 4 மணி FDFSக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்காக தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று போராடியது. பின்னர் காலை 7 மணி ஷோவுக்காகவும் அனுமதி கேட்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றாலும், காலை 9 மணிக்கு முதல் ஷோ என அறிவித்தது.
அதன்படி, லியோ வெளியாகும் 19ம் தேதி 2 சிறப்புக் காட்சிகளுடன் மொத்தம் 6 ஷோவும், 20 முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகளுக்கும் அனுமதி கொடுத்தது. அதேநேரம் புதுவையில் லியோ திரைப்படம் காலை 7 மணிக்கு திரையிடப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதனால், புதுவையை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு ரசிகர்கள் லியோவை தரிசிக்க ரெடியாக இருந்தனர். தற்போது அங்கேயும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதாவது காலை 9 மணிக்கு மேல் தான் லியோ திரையிடப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அதிகமான டிக்கெட்டுகள் கேட்டு அரசியல் பிரமுகர்கள், குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மிரட்டுவதாகவும், அதனால் காலை 9 மணிக்கு மேல் திரையிடலாம் என முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுவையிலும் லியோ FDFS க்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











