Leo First Review: "விஜய்யின் லியோ சூப்பரா வந்துருக்கு..” முதல் விமர்சனம் சொன்ன தயாரிப்பாளர்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் லலித் குமார் கலந்துகொண்டார்.
அப்போது அவர் லியோ படத்தை பார்த்துவிட்டதாகவும், அதுபற்றி விமர்சனம் சொன்னதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விஜய்யின் லியோ முதல் விமர்சனம்: வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோவுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் லியோவில் இணைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் லியோ படத்தை LCU கான்செப்ட்டில் இயக்கியுள்ளார் லோகேஷ். இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது.
லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் லோகேஷ். இந்நிலையில் லியோ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தை தயாரித்துள்ள லலித் குமார், நேற்று நடைபெற்ற மஹாராஜா பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் கலந்துகொண்டார். விஜய் சேதுபதி நடிக்கவுள்ள மஹாராஜா, அவரது 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது லியோ குறித்து பேசிய லலித் குமார், படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகக் கூறினார். முதல் பாதி சூப்பராக இருந்ததை பார்த்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை போனில் பாராட்டினேன். அதேபோல், எடிட்டர் பிலோமின் ராஜ்ஜும் லியோவில் கடுமையாக உழைத்துள்ளார். நிச்சயமாக லியோவை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்றார். அதேநேரம், விஜய் இன்னும் லியோ படத்தை பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மஹாராஜா ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லலித் குமார், லியோ இசை வெளியீட்டு விழா பற்றியும் அப்டேட் கொடுத்தார். அதன்படி லியோ இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் தான் நடைபெறும் எனவும், அது சென்னையா அல்லது வேறு எங்கு என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார். அதேபோல் அடுத்த வாரம் முதல் லியோ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனக் கூறினார்.
அவரிடம் நான் ரெடி பாடல் வரிகள் நீக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூற மறுத்துவிட்ட லலித் குமார், பின்னர் அதுபற்றி விளக்கம் கொடுப்பதாக கூறினார். 'நான் ரெடி' பாடலில் 'பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க... பத்தவச்சு பொகையவுட்டா பவரு கிக்கு' உள்ளிட்ட சில வரிகளுக்கு எதிர்ப்பு கிளம்பின. ராஜேஸ்வரி ப்ரியா என்பவர், 'நான் ரெடி' பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சையான வரிகளை நீக்க வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தினார். அதனையேற்று 'நான் ரெடி' பாடலில் உள்ள சர்ச்சையான வரிகளை நீக்க, மத்திய சென்சார் போர்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











