Leo At Rohini - விஜய் அண்ணா.. லியோ திரைப்படம் ரோகிணி தியேட்டரில் ரிலீஸ்.. உறுதி செய்த ஓனர்
சென்னை: Leo At Rohini (ரோகிணியில் லியோ) லியோ திரைப்படம் நாளை சென்னை ரோகிணி தியேட்டரில் ரிலீஸாகவிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம்தான் இப்போது கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கும் லியோவுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

ஜோர் புக்கிங்: நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையே லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் சில நாட்கள் முன்னர் தொடங்கியது. புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் வெறித்தனமாக டிக்கெட்டுகளை புக் செய்துவந்தனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் படத்துக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு காட்சி 9 மணிக்குத்தான்: இந்த சூழலில் லியோ படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஒருபக்கம் ரசிகர்களிடம் எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கான அனுமதியை கொடுத்தது. ஆனால் சிறப்பு காட்சி 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என்று அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்துவிட்டன. இதனையடுத்து 7 மணி காட்சிக்கு பட தயாரிப்பு நிறுவனம் முயற்சித்தது. ஆனால் அதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. எனவே 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது.
ரோகிணி அறிவிப்பு: நிலவரம் இப்படி இருக்க விஜய் ரசிகர்களின் கோட்டை என்று கருதப்படும் சென்னை ரோகிணி தியேட்டர் இன்று பிற்பகல் ஒரு அறிவிப்பு பலகையை வைத்தது. அதில் லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மேலும் லியோ ட்ரெய்லரின்போது விஜய் ரசிகர்கள் ரோகிணி தியேட்டரின் சீட்டுக்களை நாசம் செய்ததுதான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
ரோகிணியில் ரிலீஸ்: இந்நிலையில் ரோகிணி தியேட்டரில் லியோ படம் ரிலீஸ் ஆகவிருப்பது உறுதியாகியிருக்கிறது. சேதப்படுத்தப்பட்ட சீட்டுக்களை சீரமைப்பு செய்து ரோகிணி தியேட்டரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிரப்பட்டது. இதனையடுத்து அந்தத் தியேட்டரின் ஓனர் ரேவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் அண்ணா என்று குறிப்பில் ரோகிணியில் லியோ என்று குறிப்பிட்டுள்ளார். ரோகிணியில் லியோ திரைப்படம் ரிலீஸாவது உறுதியாகியிருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











