Lalith kumar: மீண்டும் விஜய் -லோகேஷ் கூட்டணி.. லியோ பட தயாரிப்பாளர் உறுதி!
சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள லியோ படம் இன்றைய தினம் நான்காவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
படம் கடந்த 3 நாட்களில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. மூன்று நாட்களில் 280 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.
இதனிடையே படம் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கொடுத்து வருகிறார்.

மீண்டும் விஜய் -லோகேஷ் கூட்டணி அமையும் என லலித்குமார் உறுதி: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் சோலோவாக ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லலித்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் லலித்குமார்: இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் லியோ படம் குறித்தும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் குறித்தும் தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் லியோ படத்தின் ஸ்கிரிப்ட்டை லோகேஷ் தன்னிடம் கூறியபோது, விஜய்யிடம் தான் இதுகுறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்ட சில போர்ஷன்களை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் லலித்குமார் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடுத்த 10 நாட்களில் விஜய் அறிவுறுத்தலில் லோகேஷ், ஸ்கிரிப்டை மாற்றிக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மீண்டும் விஜய் -லோகேஷ் கூட்டணி: தொடர்ந்து லியோ படம் மூலம் தற்போது LCUவில் விஜய் இணைந்துள்ளதால் மீண்டும் லோகேஷுடன் இணைவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லலித்குமார், கண்டிப்பாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் அமையும் என்றும் இருவரின் காலநேரம் ஒத்துழைத்தால் கண்டிப்பாக இந்த காம்பினேஷனை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தப் படத்தில் விஜய்யின் மார்க்கெட்டை வைத்து தான் மிக எளிதாக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மகிழ்ச்சியை தரும் விஜய் படங்கள்: முன்னதாக ஹீரோ மார்க்கெட்டை மையமாக கொண்டு கோப்ரா படத்தை தயாரித்து தோல்வியடைந்ததாகவும் ஆனால் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரித்தபோது, கண்டிப்பாக மிகவும் எளிதாக லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாகவும் லலித்குமார் மேலும் கூறியுள்ளார். அத்தகைய பாதுகாப்பை விஜய் எப்போதுமே தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பார் என்றும் லலித்குமார் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் படங்களை தயாரிப்பது தனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

10வது ஃபெயில்: தொடர்ந்து பேசிய லலித்குமார், தான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் அதிலும் ஃபெயிலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் லியோ படத்தை தான் சிறப்பாக ஹேண்டில் செய்ததாகவும் சரியான நேரத்தில் அனைத்தும் ரசிகர்களுக்கு கிடைக்கும்படி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் லியோ படம் கண்டிப்பாக விஜய்யின் முந்தைய பட வசூல் சாதனையை சில தினங்களில் முறியடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











