Leo: "ரஜினிக்கு லிங்கா... விஜய்க்கு லியோ..” வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!
சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இந்தப் படம் ஒரே வாரத்தில் 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அபிஸியலாக அறிவித்தது.

அதேநேரம் லியோ படத்தால் தங்களுக்கு லாபம் இல்லை என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இதுபற்றி வலைப்பேச்சு பிஸ்மி வெளியிட்டுள்ள ரிப்போர்ட் விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.
ரஜினிக்கு லிங்கா... விஜய் லியோ
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மாஸ்டருக்குப் பின்னர் விஜய்யுடன் லோகேஷ் இணைந்த இரண்டாவது படமாக லியோ அமைந்தது. அதேநேரம் விஜய் - லோகேஷ் கூட்டணியின் முதல் LCU படமாகவும் லியோ வெளியானது. லியோ ரிலீஸாகும் வரை இந்தப் படத்தின் மீதான ஹைப் தாறுமாறாக இருந்தது.
அதன்படி, படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்கள் கொடுத்த நெகட்டிவான விமர்சனங்களால், லியோ முதல் நாளிலேயே தடுமாறத் தொடங்கியது. அதேநேரம், லியோவுக்கு ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் தாறுமாறாக இருந்ததால், முதல்நாளில் மட்டும் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இது முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது. ஆனாலும் இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இல்லை என அவர்கள் போர்க் கொடித் தூக்கியுள்ளனர். ஏற்கனவே இதுபற்றி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பகிரங்கமாக பேட்டிக் கொடுத்திருந்தார். தற்போது வலைப்பேச்சு பிஸ்மியும் இதுபற்றி ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.
அதில், ரஜினிக்கு லிங்கா படம் மாதிரி, விஜய்க்கு லியோ என கூறியுள்ளார். அதாவது ரஜினியின் லிங்கா படத்தை மிகப் பெரிய விலைக்கு விற்பனை செய்தனர். ஆனால், அந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் கொடுக்கவில்லை. அதேபோல் தான் இப்போது விஜய்யின் லியோவும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டமாக அமைந்துள்ளது.
அதாவது திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் விலையில் கிடைக்கும் லாபத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை அதன் உரிமையாளர்களுக்கு ஷேர் கொடுக்க வேண்டும். ஆனால், லியோவில் அப்படி இல்லாமல் 20 சதவீதம் மட்டுமே ஷேர் கொடுக்கப்பட்டுள்ளதாம். முக்கியமாக முதல் 6 நாட்களில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதில் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆர்டர் போடப்பட்டிருந்தது.
வழக்கமாக ஒரு படத்தின் இடைவேளை பிரேக் 20 நிமிடங்கள் வரை இருக்கும். ஆனால், லியோ ரன்னிங் டைம், சிறப்புக் காட்சி போன்றவற்றால் 5 நிமிடங்கள் மட்டுமே பிரேக் விடப்பட்டது. இதனால் தியேட்டரில் கேண்டீன் வியாபரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் லியோ படத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. மொத்த லாபத்தையும் தயாரிப்பு தரப்பினரே எடுத்துக்கொண்டதாக வலைப்பேச்சு பிஸ்மி குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











