Leo: லியோவுக்கு இனிதான் பிரச்சினையே... எல்லாமே விஜய் எடுக்குற முடிவுல இருக்கு... தயாரிப்பாளர் ஓபன்!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், லியோவுக்கு இனிதான் சிக்கல் இருப்பதாக கங்குவா தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

லியோவுக்கு இனிதான் பிரச்சினையே: வாரிசு வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் விஜய். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியால் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய்யுடன் த்ரிஷா, கெளதம் மேனன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ். இன்னொரு பக்கம் லியோ படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸும் ஆரம்பமாகிவிட்டது.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோ, ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய்யின் லியோ குறித்து பேசியுள்ளார். இந்தப் படம் மீதான எதிர்பார்ப்புக்கு விஜய்யும் லோகேஷும் தான் காரணம் எனக் கூறியுள்ள அவர், இருவரையும் பாராட்டியுள்ளார். விஜய் போன்ற லீடிங் ஸ்டார் ஒரே ஷெட்யூலில் கால்ஷீட் கொடுத்து நடித்தது பாராட்டப்பட வேண்டியது என்றுள்ளார்.
அதேநேரம் இதுவரை திட்டமிட்டபடி லியோ படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் எடுத்துமுடித்துவிட்ட லோகேஷ், இனி அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதில் தான் அதிக சிக்கல்கள் இருக்கின்றன. விஜய்யும் லோகேஷும் சேர்ந்து பாதி கிணற்றை வெற்றிகரமாக தாண்டிவிட்டனர். இன்னும் மீதி கிணற்றை தாண்ட வேண்டுமானால் லியோவின் ப்ரோமோஷன் ரொம்பவே முக்கியம் என்றுள்ளார்.
அதுமட்டும் சரியாக நடந்துவிட்டால், தமிழில் முதல் ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனை லியோ திரைப்படத்துக்கு தான் எனக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறிய ப்ரோமோஷன் என்பது விஜய்யை குறிவைத்து தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். டோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் அவர்களது படங்கள் வெளியாகும் போது ப்ரொமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்கின்றனர். ஆனால், தமிழில் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் பேட்டிகள் கொடுப்பதில்லை.
ஆனால், லியோவுக்காக விஜய்யும் இறங்கி ப்ரோமோஷன் செய்தால், இந்தப் படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்த நேரத்திலும் 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











