ரஜினிக்கு எப்படி அந்த மூன்றெழுத்தோ அதேபோல சிம்புவிற்கு இந்த மூன்றெழுத்து... டி.ராஜேந்தர் பெருமிதம்!
சென்னை: நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியானது. ஐசரி.கணேஷ் அவர்களின் வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் சிம்புவை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கௌதம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் சிம்பு கூட்டணியில் மூன்றாவதாக உருவான படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த படம் பெற்றுள்ள நிலையில் நேற்று இயக்குநரும் சிம்புவின் அப்பாவுமான டி.ராஜேந்தர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வி.டி.வி பார்ட் 2
கௌதம் மற்றும் சிம்பு மீண்டும் ஒரு படம் பணிபுரியலாம் என்று முடிவெடுத்தபோது விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்றுதான் துவங்கியுள்ளனர். ஆனால் இடையில் லாக் டவுன் வந்து காலதாமதமானது. அப்போது கார்த்திக் டயல் செய்த எண் என்று வி.டி.வி கதாபாத்திரங்களை வைத்து ஒரு குறும்படத்தை வீட்டில் இருந்தபடியே எடுத்து வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் நதிகளிலே நீராடும் சூரியன் என்கிற காதல் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்கள். அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து பதிவும் செய்துவிட்டாராம்.

வெற்றிமாறன் செய்த அறிமுகம்
அப்போது காதல் படத்திற்கு பதிலாக ரியலிஸ்ட்டிகான ஒரு படம் பண்ணலாம் என்று முடிவெடுத்து வெற்றிமாறனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். வெற்றிமாறன்தான் ஜெயமோகனின் அலைபேசி எண்ணை கொடுத்து கௌதமை பேச சொன்னாராம். அப்போது அக்னி குஞ்சொன்று கண்டேன் என்கிற கதையை ஜெயமோகன் கூறியுள்ளார். அந்த கதை பிடித்து போகவே உடனே தொடங்கப்பட்டது தான் வெந்து தணிந்தது காடு திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்த போதே அசுரன் திரைப்படத்தின் சாயல் தெரிவதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

20 வயது சிம்பு
இந்தப் படத்தில் புதுமுகம் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று ஜெயமோகன் சொன்னபோது இல்லை சிம்புவை வைத்து பண்ணலாம் என்று கௌதம் அறிவுறுத்தியுள்ளார். சிம்புவும் அதற்கு ஏற்றார் போல 20 வயது இளைஞன் போல மாறி வந்ததும் 20 அல்ல பார்ப்பதற்கு 18 வயது இளைஞன் போல சிம்பு இருக்கிறார் என்று ஜெயமோகன் கூறினாராம்.

ஏ.வி.எம் - ஜி.வி.எம்
இந்நிலையில் நேற்றைய முன் தினம் இயக்குநர் டி.ராஜேந்தர் நீண்ட பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் பேசும்போது ரஜினிக்கு ஏ.வி.எம் என்ற மூன்றெழுத்து எப்படி ராசியோ அதுபோல சிம்புவிற்கு ஜீ.வி.எம் என்ற மூன்றெழுத்து ராசியானவர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சிறப்பாக வந்துள்ளதாக டி.ராஜேந்தர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். இப்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படத்தினுடைய இரண்டாம் பாகத்தினை விரைவாக எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











