300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா... மெகா ஹிட்டாம்!
ரஜினியின் லிங்கா திரைப்படம் 300-க்கும் அதிகமான அரங்குகளில் 25 நாளைக் கடந்து ஓடுகிறது.
இந்தப் படத்துக்காக இன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தில் படம் மெகா ஹிட் என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து வெளியான படம் லிங்கா. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அவரது ரசிகர்களுக்குப் பரிசாக படத்தை வெளியிட்டனர்.
இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக கிட்டத்தட்ட 700 அரங்குகளிலும் உலகெங்கும் 3000-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியான லிங்கா படம், முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.
ஆனால் நான்காவது நாளே படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிலர் புகார் கூறினர். படம் குறித்து அவதூறு பரப்பினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் எச்சரித்தது.
இப்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஓடிய நிலையில், மீண்டும் நஷ்டம் என்று கூறி சிலர் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் படம் 25 நாளைத் தாண்டி ஓடுவதையொட்டி இன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில் லிங்கா மெகா ஹிட் என அறிவித்துள்ளனர். இந்தப் படம் பெரும் வசூலை ஈட்டியுள்ளதாகவும், அந்த விவங்களை வரும் 8-ம் தேதி வெளியிடப் போவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.
படம் இன்னும் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. சென்னை நகரில் 20 அரங்குகளிலும், புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் 50-க்கும் அதிகமான அரங்குகளிலும் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.
கோவை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 40-க்கும் அதிகமான அரங்குகளிலும், திருச்சி - தஞ்சைப் பகுதியில் 20 அரங்குகளிலும் 25 நாளைக் கடந்து ஓடுகிறது லிங்கா.


Click it and Unblock the Notifications












