தமிழ், தெலுங்கு, இந்தியில் லிங்காவை உலகம் முழுவதும் வெளியிடும் ஈராஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மும்பை: ரஜினியின் புதிய படம் லிங்காவை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள ஈராஸ், இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லிங்காவின் உலக உரிமையை ஈராஸ் நிறுவனம் ரூ 165 கோடிக்கு வாங்கிய செய்தியை நேற்றே ஒன் இந்தியா வெளியிட்டது நினைவிருக்கலாம்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது ஈராஸ். ஆனால் தொகையை மட்டும் குறிப்பிடவில்லை.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தை வாங்கியது குறித்த, ஈராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமான லிங்காவை வாங்கியதில் ஈராஸ் நிறுவனம் பெருமை அடைகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் உலகமெங்கும் அதிக அரங்குகளில் வெளியிடவிருக்கிறோம்," என குறிப்பிட்டுள்ளது.
ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "ரோபோ படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் லைவ் ஆக்ஷன் படமான லிங்கா வை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்," என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் ஈராஸ் உடனான முதல் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











