அவதூறு பேச்சு.. ரஜினியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறோம்! - விநியோகஸ்தர்கள்
லிங்கா பட விவகாரத்தில் ரஜினியைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் விநியோகஸ்தர்கள்.
லிங்கா படம் நஷ்டம் என்று கூறி, ஆரம்பத்திலிருந்தே சில விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில தினங்களாக இதை ஒரு தினசரி பிரச்சாரமாகவே செய்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட ரஜினி தலையிட வேண்டும் என்று கோரி சீமான், வேல்முருகன் துணையுடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருந்தனர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், லிங்கா விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தங்களை காயப்படுத்தி விட்டதாக அறிவித்தார். படத்தை சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் கொன்றுவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், இன்று சிங்கார வேலன், செங்கல்பட்டு விநியோகஸ்தர் மன்னன் உள்ளிட்ட சில விநியோகஸ்தர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறும்போது, "லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கோரி நாங்கள் இருந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு வேந்தர் மூவிஸ் சிவா எங்களிடம் மன்னிப்பு கடிதம் கோரியுள்ளார். நாங்கள் ஏன் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
மேலும், நடிகர் ரஜினியை காயப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை காயப்படுத்தும் விதமாக எதுவும் செய்யவில்லை.
படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் வசூல் குறித்து வெளியிட்டது, எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், பதட்டமடைந்து சொல்லிவிட்டோம். மேலும், ரஜினி பிறந்தநாள் தேசிய விடுமுறையா? அன்றைய தேதியில் ஏன் படத்தை வெளியிடுகிறீர்கள்? ரஜினி ரசிகர்கள் வயது குறித்தெல்லாம் பேசியதற்கு ரஜினியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மற்றபடி, இந்த படத்திற்கு உரிய நஷ்டஈடு தராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்," என்றனர்.


Click it and Unblock the Notifications











