லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்து சென்னையில்!!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்காவின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு சென்னையில் முகாமிடுகிறார்கள் ரஜினி மற்றும் குழுவினர்.
கோச்சடையான் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் நடித்து வருகிறார்.

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மைசூரில்
இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் 40 நாட்கள் நடத்தினர். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் சரித்திர கால செட் அமைத்து படமாக்கி வந்தனர்.
ஹைதராபாத்
இந்நிலையில் நேற்றுடன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளனர்.
சென்னையில்
இந்த மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகத் தெரிகிறது.
ஏமாற்றம் வேண்டாம்
லிங்கா படப்பிடிப்பு ஆரம்பம் முதல் தமிழ்நாட்டில் படமாகாமல் வேறு மாநிலங்களிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இது இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. தற்போது அந்தக் குறையைப் போக்குவதற்காக அடுத்த கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவதென முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி.
ரசிகர்கள்
தமிழகத்தில் ரஜினியின் ஷூட்டிங் என்றால் ரசிகர்கள் படையாகத் திரண்டு வந்துவிடுவது வழக்கம். இந்த முறையும் அப்படி நடக்கும் என்பது தெரிந்திருப்பதால், ரசிகர்களுக்கென ஒரு நேரம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம் சூப்பர் ஸ்டார்.


Click it and Unblock the Notifications











