கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும் லிங்கா!
கிறிஸ்துமஸுக்கு புதிய படங்கள் வெளியானாலும், பல அரங்குகளில் நிலையாக ஓடிக் கொண்டிருக்கிறது ரஜினியின் லிங்கா.
தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் லிங்கா இன்னும் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பது படத்தை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
கடந்த டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா படம். இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவுக்கு பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தது தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியான லிங்காவுக்கு.

முதல் மூன்று தினங்களில் ரூ 104 கோடியை இந்தப் படம் குவித்தது. இந்தியில் வெளியாகும் படங்களுக்கு இந்த வசூல் சாத்தியம் என்ற நிலையில், மாநில மொழியில் வெளியான லிங்கா மூன்றே நாட்களில் நூறு கோடி க்ளப்பில் சேர்ந்தது. அடுத்து வந்த ஆமீர்கானின் பிகேவால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் லிங்காவுக்கு சரியான கூட்டமில்லை, நஷ்டம் என்றெல்லாம் சிலர் புகார் கிளப்பி வந்தனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் கூட்டம் வரும் என்று அவர்களுக்கு பதில் அளித்தனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் புதிய படங்கள் வருவது படத்தை பாதிக்கும் என்று இன்னொரு தரப்பினர் கூறிவந்தனர்.
ஆனால் அனைவரின் கணக்கையும் கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் லிங்கா படம் வெளியிட்ட திரையரங்கள் பலவற்றில் ஓடிக் கொண்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "லிங்கா படம் 720 அரங்குகளில் வெளியானது. எங்கு பார்த்தாலும் அந்தப் படம்தான் கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் முதல் வாரம் முடிந்ததுமே கொஞ்சம் அரங்குகளைக் குறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படம் ஹவுஸ்புல்லாகவே தொடரும்.
ஆனால் இந்த வாரம் புதிய படங்கள் நான்கைந்து வந்துள்ளன. இவற்றைத் திரையிடுவதற்காக சில காட்சிகளை, அரங்குகளைக் குறைத்திருக்கிறார்கள். இது இயல்பான விஷயம்தான். இப்போது இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் லிங்கா ஓடுவதாக ரிப்போர்ட்ஸ் வருகிறது," என்றார்.
தமிழகத்தில் சென்னையில் லிங்கா இன்னும் பெருமளவு அரங்குகளில் மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. சத்யம், ஐநாக்ஸ் உள்ளிட்ட மால்களில் இன்றைக்கும் இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நல்ல வசதியான மால்களில் படத்துக்கு நல்ல கூட்டம். விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற அரங்குகளிலும் 90 சதவீத பார்வையாளர்களுடன் லிங்கா வெற்றி நடை போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











