லிங்கா படத்தைப் பார்க்காமலேயே தடை கோருவது சாபக்கேடு - கலைப்புலி தாணு
சென்னை: லிங்கா படத்தைப் பார்க்காமலேயே கதைக்கு உரிமை கோரி தடை கேட்டு வழக்குப் போடுவது சாபக்கேடு என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
ரஜினி நடிக்கும் ‘லிங்கா' படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்த ரவி ரத்தினம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், முல்லைப்பெரியாறு அணை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘முல்லை வனம் 999' என்ற படத்தை எடுக்கிறேன். எனது கதையை திருடி ‘லிங்கா' என்ற பெயரில் படம் எடுக்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டு உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், "சமீபகாலமாக படங்களுக்கு எதிராக வழக்குகள் தொடர்வது பெருகி வருகிறது.
எனது கந்தசாமி மற்றும் துப்பாக்கி படங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டன. விஜய் நடித்த ‘கத்தி' படத்தின் கதையை திருடி விட்டதாகவும் வழக்கு தாக்கல் ஆனது.
இப்போது ‘லிங்கா' படத்தை எதிர்த்தும் நீதிமன்றத்துக்குப் போய் உள்ளனர்.
படம் ரிலீசான பிறகு ஆட்சேபனை இருந்தால் வழக்கு தொடரலாம். ஆனால் படம் பார்க்காமலேயே யூகத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடர்வது துதிர்ஷ்டவசமானது. திரையுலகுக்கு நேர்ந்துள்ள சாபக்கேடு. இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்," என்றார்.


Click it and Unblock the Notifications











