உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
சென்னை: இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தை பண்ண வேண்டாம் என எவ்வளவோ தடுத்தும் கமல்ஹாசன் இந்த படத்தை பண்ணுவதில் உறுதியாக இருந்தார்.
படத்தை எடுத்து முடித்து பார்த்தபோது நாங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளையும் திருத்துவதாக சொன்ன கமல்ஹாசன் கடைசியில் அப்படியே வெளியிட்டது தான் உத்தம வில்லன் படம் படுதோல்வியை சந்திக்க காரணம் என இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகீர் கிளப்பியுள்ளார்.

உத்தம வில்லன் திரைப்படம் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம் என்றும் சமூக வலைத்தளத்தில் சிலர் அந்தப் படத்தை லாபகரமான படம் என பேசி வருவது முற்றிலும் தவறு என இயக்குநர் லிங்குசாமி புதிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கமல் படத்தால் பெரிய நஷ்டம்: நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்தால் தங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது என லிங்குசாமி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சொன்ன வாக்கை காப்பாத்தல: மேலும், அந்த படத்தின் தோல்விக்கு பிறகு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தங்கள் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றை செய்து தருவதாக கமல்ஹாசன் தெரிவித்த நிலையில் 9 ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் அவர் எங்களுக்கு எந்த ஒரு படத்தையும் பண்ணி தரவில்லை என்கிற ஆதங்கத்தையும் லிங்குசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
லிங்குசாமி அறிக்கை: "தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் திரு. கமலஹாசன் அவர்களை வைத்து first copy (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான 'உத்தம வில்லன்' எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்திய படமாகும்.
இது திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு. சந்திரஹாசன்அவர்களும் மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலையில் சமூக வலைத்தளமான வலைப்பேச்சு என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது இதுபோன்று தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்." என இயக்குநர் லிங்குசாமி தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கமல் மீது மரியாதை: மேலும், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் மீது உள்ள மரியாதை காரணமாகத்தான் பொறுமையாக இருக்கிறேன். விரைவில் அவர் படம் பண்ணி தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், தேவையில்லாமல் உத்தம வில்லன் படத்தை லாபகரமான படமாக எப்படி சொல்லலாம் என விளாசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











