ஐஸ்வர்யா ராய் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்ட படங்கள்... அப்பவே அப்படியா.?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதுமே ரஜினிக்கு ஜோடியாக வேண்டும் என்பதில் தான் நடிகைகளுக்குள் கடும் போட்டி காணப்படும்.
ஆனால், ஐஸ்வர்யா ராய்யை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ரஜினிகாந்த் பல முறை தூதுவிட்டுள்ளார்.
ஒருவேளை ரஜினியின் கனவு பலித்திருந்தால் அவரது இத்தனை படங்களில் ஐஸ்வர்யா ராய் தான் ஜோடியாக நடித்திருப்பார். அந்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டாரின் முத்து
ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் மகுடம் சூடினார். அப்போதே அவரை தனது படத்தில் ஜோடியாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். 1995ல் ரஜினியின் பாட்ஷா வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய முத்து படத்தில் நடித்தார் ரஜினி. இந்தப் படத்தில் தான் ஏஆர் ரஹ்மானும் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், அப்போது அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டதால், ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக மீனா நடித்துள்ளார்.

படையப்பா நீலாம்பரி
சூப்பர் ஸ்டார் ரஜினி - கேஎஸ் ரவிக்குமார் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி படையப்பா படத்தில் மீண்டும் இணைந்தது. இந்தப் படம் 1998ல் ஷூட்டிங் தொடங்கி 1999ம் ஆண்டு வெளியானது. இதனிடையே 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிவிட்டார் ஐஸ்வர்யா ராய். அதனால், படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்கலாம் என ரஜினி முயற்சி செய்து பார்த்தாராம். ஆனால், அப்போதும் இது கை கூடாமல் போக, இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக நடித்தார்.

பாபாவில் ஐஸ்வர்யா ராய்
படையப்பாவுக்கு பின்னர் 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு வெளியானது பாபா. ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், ரஜினியின் கேரியரில் பாபா தான் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதிலும் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க ரஜினி விரும்பினாராம். ஆனால், மனீஷா கொய்ரலாவே நடிக்கும் சூழல் உருவானது.

சந்திரமுகியாக ஐஸ்வர்யா ராய்
பாபாவுக்கு பின்னர் மீண்டும் 3 வருட இடைவெளிவிட்ட ரஜினி, சந்திரமுகி திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். பி வாசு இயக்கிய இந்தப் படம் பாபாவுக்கும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து கெத்து காட்டியது. இதில் சந்திரமுகி / கங்கா என இரட்டை பாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் கேட்கப்பட்டதாம். ஆனால், அப்போதும் ரஜினியின் ஆசை நிறைவேறாமல் போக, ஜோதிகா சீனில் வந்தார். படையப்பா, சந்திரமுகி படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டதாக ரஜினியே பலமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நிறைவேறிய கனவு
முத்து, படையப்பா, பாபா, சந்திரமுகி என தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மீது படையெடுத்து வந்த ரஜினிக்கு, எந்திரன், 2.O படங்களில் தான் கனவு நனவானது. இந்த இரண்டு படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதெநேரம், ரஜினிக்கு கல்தா கொடுத்து விட்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர், ஷங்கரின் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











