யோகிபாபுவால் வீடும் போச்சு.. நிம்மதியும் போச்சு.. லோக்கல் சரக்கு தயாரிப்பாளர் வேதனை!
சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் சினிமா செய்திகளைக் கொடுத்துவரும் வலை பேச்சு யூடூயூப் சேனலைச் சேர்ந்த அந்தணன், மிஸ்மி மற்றும்சக்தி ஆகியோருக்கு இடையில் பிரச்னை தொடங்கி கடந்த சில நாட்களாக போய்க்கொண்டு உள்ளது. யோகி பாபு அவர் கொடுத்த பேட்டியில், வலைபேச்சு பெயரைக் குறிப்பிடமால், தன்னிடம் பணம் கேட்பதாக கூறினார். இதற்கு வலைபேச்சு தரப்பில் இருந்தும் பதில் கொடுக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு இடையில் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் வலைபேச்சு பிஸ்மி லோக்கல் சரக்கு என்ற படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசை அமைப்பாளர் சுவாமிநாதனை பேட்டி எடுத்துள்ளார். அதில் தயாரிப்பாளரும் இசை அமைப்பாளருமான சுவாமிநாதன் கூறியுள்ள விஷயங்கள் பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சுவாமிநாதன் அந்த பேட்டியில் பேசியதாவது, " எனக்கு தொடக்கத்தில் இருந்தே படத்தில் யோகிபாபுவைக் கொண்டு வருவதில் விருப்பம் இல்லை. இயக்குநர்தான் யோகி பாபு படத்தில் இருந்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவும் எனக் கூறினார். இறுதியில் நான் ஒப்புக்கொண்டேன். படத்தை தயாரிக்க எனது அக்காவும் மனைவியும்தான் பணம் போட்டார்கள். படம் தொடர்பாக யோகி பாபுவிடம் பேசும்போது, முழு பணத்தையும் உடனே கொடுத்தால் அடுத்த வாரத்தில் தேதி தருகின்றேன் எனக் கூறினார். அவரின் பேச்சை நம்பி நாங்களும் பணம் கொடுத்துவிட்டோம்.

பணத்தை வாங்கிக் கொண்ட பின்னர் ஒருமாதத்தில் தேதி தருவதாக கூறினார். இதேபோல் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். இதனால் நான் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முழு சம்பளத்தையும் வாங்கிய யோகிபாபு, செப்டம்பர் மாதத்தில் இருந்து அந்த ஆண்டு இறுதி வரை 9 நாட்கள் மட்டும் கொடுத்தார். இதன் பின்னர் டப்பிங்கிற்கும் இழுத்தடித்தார். எனது மனைவியோ அல்லது அக்காவோ அவரிடம் பேசினால், " சிஸ்டர் கண்டிப்பா வந்துடுவேன் சிஸ்டர்" எனக் கூறுகின்றார். ஆனால் வருவதில்லை.

வீட்டை விற்றோம்: இவரால் இந்தப் படத்தை நாங்கள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் எடுக்க வேண்டியதாகபோனது. இவரால் பல நாட்கள் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும், கேரவனுக்குள் சென்றுவிடுவார். அவர் எப்போது வருவார் என நாங்கள் காத்துக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு எங்களது பணம் வீணாகப் போயுள்ளது. லோக்கல் சரக்கு படத்தினால், எங்களது வீட்டினை விற்றோம். இறுதியாக அந்தப் படத்தில் ரூபாய் 35 லட்சம் நஷ்டம் தான் அடைந்தோம். இதுமட்டும் இல்லாமல் நிம்மதியை இழந்தோம், காரில் உட்கார்ந்து அழுதிருக்கின்றேன்.

மக்கள்: தயாரிப்பாளர்களை மக்களுக்குத் தெரியாததால், பெரிய நடிகர்கள் சொல்வதை மக்கள் நம்பி விடுகின்றார்கள். எங்கள் படத்தில் செய்ததைப் போல் ரஜினி சார் படத்திலோ விஜய் சார் படத்திலோ படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வருவாரா? அப்படி வந்தால் என்ன ஆகும்? தயாரிப்பாளரை மதிக்காத, தனது தொழிலின் மீது பக்தியாக இல்லாத யோகி பாபுவை வைத்து நான் காலத்திற்கும் படம் எடுக்க மாட்டேன். வளர்ந்த நடிகரோ அல்லது வளரும் நடிகரோ, யார் தயாரிப்பாளர்களை மதிக்கின்றார்களோ அவர்களை வைத்து படம் எடுத்துக்கொண்டு போவேன்" இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

யோகி பாபு பதில்?: இந்த பேட்டி வேகமாக பரவ, யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் முருகன் வேலை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வலைபேச்சு யோகி பாபு குறித்து வீடியோ வெளியிட்டபோதும் இதேபோல் முருகர் வேலை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











