மிகப்பெரிய மோசடி நடக்குது.. துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் ரெய்டு.. சிக்குவாரா லக்கி பாஸ்கர்?
கொச்சி: 'ஆபரேஷன் நும்க்கூர்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மலையாளத் திரைப்பட நடிகர்களான பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
லோகா படம் மலையாள திரையுலகிலேயே அதிகம் வசூல் செய்யப்பட்ட படமாக 270 கோடி வசூல் செய்து மோகன்லாலின் எம்புரான் படத்தின் வசூலை முந்தியுள்ளது. துல்கர் சல்மான் தான் லோகா படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்புரான் படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் வீடுகளிலும் இன்று சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகம் திடீரென பாக்ஸ் ஆபீஸில் கொடி கட்டிப் பறந்து வரும் நிலையில், மிகப்பெரிய மோசடி நடப்பதாக தகவல்கள் கிடைத்த நிலையில், அதிரடியாக முன்னணி நடிகர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் ரெய்டு: தேவராவில் உள்ள பிருத்விராஜின் வீட்டிலும், பனம்பில்லி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டிலும் இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆடம்பரக் கார்கள் வரி செலுத்தாமல் பூடான் வழியாக இந்தியாவுக்குக் கடத்தப்படுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் 'ஆபரேஷன் நும்க்கூர்' திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சொகுசு கார் மோசடி: திருவனந்தபுரத்தில் உள்ள பிருத்விராஜின் வீட்டிற்குச் சென்ற குழுவினர், அங்கு வாகனங்கள் இல்லாததால் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இன்று கேரளாவில் 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து பூடானுக்கு ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய சில விதிவிலக்குகள் உள்ளன. இந்த வாகனங்கள் பின்னர் போலியான முகவரிகளில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன.
ரகசிய ஒப்பந்தம்: இந்தக் கடத்தல் ஒப்பந்தங்களை ரகசியமாக முடிப்பதற்காக இந்தியாவில் முகவர்கள் உள்ளனர். இந்த முகவர்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில காலமாக உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர்.
அவர்களை மையமாகக் கொண்ட விசாரணையில், வாடிக்கையாளர் பட்டியல் கண்டறியப்பட்டது. இதில் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பிற பெரும் பணக்காரர்களின் பெயர்கள் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெரிய புள்ளிகள் சிக்குவார்களா?: பூடானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள், வரியைத் தவிர்ப்பதற்காக இந்தியாவில் பழைய வாகனங்களாகப் பதிவு செய்யப்படுவதைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கேரளா மற்றும் லட்சத்தீவுகளின் பொறுப்பு ஆணையரின் தலைமையில், மாநிலத்தில் சுமார் 30 மையங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. நடிகர்கள் தவிர, களமச்சேரியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வீட்டிலும், மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாகன விற்பனையாளர்கள் இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











