மாநகரம் ஸ்ரீ விஷயம்.. என்ன நடக்கும்னு சொல்ல முடியாது.. ஓபனாக போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு தவறான பாதையில் சிக்கி நிலைகுலைந்திருந்தார். ஒருவழியாக அவர் இருக்கும் இடத்தை லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டுபிடித்து மீட்டு சிகிச்சைக்கு உதவினார்கள். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார் லோகேஷ்.
தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக வருவார் என்று கணிக்கப்பட்டிருந்த ஸ்ரீ திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பெரும்பாலும் அவரை எல்லோரும் மறந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். அது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அவரை உடனடியாக லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் மீட்க உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
நார்மல் ஆன ஸ்ரீ: நிலைமை விபரீதமாவதை உணர்ந்த லோகேஷும் மற்ற சிலரும்; ஸ்ரீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனையடுத்து ஸ்ரீயும் இப்போது பழையபடி நார்மலாகியிருக்கிறார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவருகிறார். விரைவில் இன்னொரு புத்தகம் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

லோகேஷின் பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "ஸ்ரீ இப்போது நன்றாக இருக்கிறார். ஒருமுறை வீடியோ காலில் பேசும்போது புத்தகம் வெளியிட இருப்பதாக கூறினார். சரியாக பிளான் செய்து செய்யலாம் என கூறினேன். அதற்கு அவரோ, இல்லை மச்சான் உடனே செய்ய வேண்டும் என்றார். சரி என்று கூறிவிட்டேன். இன்ஸ்டாகிராமில் அவர் ஏதோ ஒரு ரீல் போட்டதற்கு, 'நான் ஸ்ரீயை கவனித்துக்கொள்ளவில்லை' என என்னையும் திட்டினார்கள். அதனால்தான் சோஷியல் மீடியாக்களிலிருந்து விலகியே இருக்கிறேன்.
அதெல்லாம் முடியாது: தினமும் எழுந்து அனைவருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் சொல்ல முடியாது. ஸ்ரீயின் வாழ்க்கை அவருடையது. அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. நாங்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கேமராவுக்கு முன்பு அனைத்தையும் எங்களால் பேச முடியாது. அதனால்தான் ஸ்ரீயை பற்றி பேச தயங்குகிறேன். அவரும் அவரது குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதை வெளியே சொல்ல முடியாது. முழுமையாக அவர் குணமான பிறகு அனைவரும் அவரை பற்றி பேசியதை அவர் பார்க்க நேரிடலாம்.
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: ஸ்ரீயின் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நாங்கள் அவருக்கு என்ன செய்கிறோம் என்பதை ஏன் நாங்கள் வெளியே சொல்ல வேண்டும். என்னை, எஸ்.அர்.பிரபுவை எல்லாம் திட்டினார்கள். இந்த விஷயத்துக்கு இடையே நான் ஷூட்டிங்கையும் நடத்த வேண்டும்; ஸ்ரீயையும் கவனிக்க வேண்டும். அதான் சமூக வலைதளங்களிலிருந்து முழுவதுமாக விலகினேன். ஸ்ரீ இப்போது நலமோடு இருக்கிறார். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறோம். நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











