30 நாள் போதும்.. 2ம் பாகத்தை எடுத்திடலாம்.. பிரபல நடிகரை அசைத்துப் பார்க்கும் மாஸ்டர் இயக்குநர்?
சென்னை: மாஸ்டர் படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் நிலையில், சீக்வல் பண்ணும் ஐடியாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முனைப்பு காட்டி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது.
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, மாஸ்டர் படக்குழு தரப்பில் இருந்து என்ன சர்ப்ரைஸ் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஐடியாவில் அந்த பிசியான நடிகருடன் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளாராம்.

முதல் படம்
சந்தீப் கிஷன், ரெஜினா கஸாண்ட்ரா, ஸ்ரீ, சார்லி மற்றும் முனிஷ்காந்த் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை லோ பட்ஜெட்டில் இயக்கி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இரவு நேரத்திலேயே அந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர்
மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் கடந்த ஆண்டு பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தியின் 'டில்லி' கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக விரும்பப்பட்டது.

ரிலீசுக்கு வெயிட்டிங்
முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்த லோகேஷ் கனகராஜ், மூன்றாவது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறார். தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர்கள் பட்டாளமே நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம், தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கின்றது.

லோகேஷ் திட்டம்
லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், தியேட்டர்கள் ரிலீஸ் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களின் ஷூட்டிங் தாமதமாகும் என தெரிந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், அசுர வேகத்தில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கார்த்தி நடிப்பில் பல படங்கள் இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

30 நாள் போதும்
கைதி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் லைவில் கார்த்தியுடன் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வெறும் 30 நாள் கால்ஷீட் கொடுத்தால் கூட போதும், கைதி 2 வை இயக்கிவிடுவேன் எனக் கூறியிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தாமதமாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கார்த்தியிடம் கால்ஷீட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











