“கைதி 2 ஸ்க்ரிப்ட் இன்னும் முடியல, இரும்புக் கை மாயாவி ரெடியா இருக்கு”: லோகேஷ் சொன்ன புது அப்டேட்
சென்னை: மாநகரம் தொடங்கி விக்ரம் வரை நான்கே படங்களில் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
Recommended Video
அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வெற்றிகரமான 75வது நாளை கொண்டாடி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் 'தளபதி 67' படத்தை விரைவில் இயக்க உள்ளார்.

டாப் கியரில் லோகேஷ் கனகராஜ்
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், 'மாநகரம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பலரது பாராட்டுகளையும் பெற்ற லோகேஷ், அடுத்ததாக கார்த்தியுடன் 'கைதி' படத்தில் இணைந்தார். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ரிலீஸான இந்தப் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றி லோகேஷின் மார்க்கெட்டை டாப் கியருக்கு ஏற்றிவிட்டது.

தளபதியுடன் மாஸ் காட்டிய மாஸ்டர்
மாநகரம், கைதி படங்களின் வெற்றியைப் பார்த்த விஜய், லோகேஷ் கனகராஜுடன் இணைந்தார். விஜய் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் அதிரடி காட்ட, 'மாஸ்டர்' படம் உருவானது. ஆக்சன், மாஸ் என கமர்சியலாக உருவாகியிருந்த 'மாஸ்டர்' தமிழ் சினிமாவில் வசூல் சாதனை செய்தது. அதுவும் கொரோனாவால் 50 சதவிதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தபோது, 200 கோடி வசூலை வாரி குவித்தது.

வேற லெவல் ஹிட்டடித்த விக்ரம்
மாநகரம், கைதி, மாஸ்டர் என தூள் கிளப்பிய லோகேஷ், நான்காவது படத்தில் கமலுடன் கை கோர்த்தார். கமல் மட்டும் இல்லாமல் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பிரமாண்டக் கூட்டணியில் வெளியான விக்ரம், விஸ்வரூப வெற்றிப் பெற்றது. சுமார் 500 கோடி வசூலையும் கடந்து மாஸ் காட்டியது. இதனால், லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கின. அடுத்ததாக விஜய்யுடன் 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்து கார்த்தியா அல்லது சூர்யாவா?
விஜய் படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு கார்த்தியின் 'கைதி 2' படம் தொடங்கும் என சொல்லப்பட்டது. அதேநேரம் விக்ரம் படத்தின் அடுத்த பாகம், சூர்யாவின் 'இரும்புக் கை மாயாவி' என லோகேஷ் முன் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், "4 வருடங்களுக்கு முன்பு இரும்புக் கை மாயாவி கதையை சூர்யாவிடம் சொன்னேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுதான் புது அப்டேட்
மேலும், "பட்ஜெட் காரணங்களால் அந்தப் படத்தை உடனே இயக்க முடியவில்லை. ஆனாலும், அதன் திரைக்கதையை 4 வருடங்களாகவே எழுதி வருகிறேன், எனவே 'இரும்புக் கை மாயாவி' எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், கைதி 2 ஸ்கிரிப்ட் இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது. இதில் எது முதலில் தொடங்கும் என இப்போதைக்கு தெரியவில்லை. சூர்யாவின் இரும்புக் கை மாயாவி கைவிடப்படவில்லை" என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











