அண்ணே ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க அண்ணே.. கெஞ்சிய வடிவேலு.. சாமிநாதன் ஷேரிங்ஸ்
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி: இதனையடுத்து பிரச்னைகள் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தன. அதாவது அவருடன் நடித்த பலரும் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். முக்கியமாக தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராஜ்கிரணையே வடிவேலு மதிப்பதில்லை என்று பலமான குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வடிவேலுவின் இன்னொரு முகமா என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர். இருந்தாலும் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வடிவேலு பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை.
லொள்ளு சபா சாமிநாதன் பேட்டி: இந்நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து; பிறகு சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த சாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ராஜ்கிரண் ஆஃபிஸில் ஆஃபிஸ் பாயாக வடிவேலு இருப்பார். அப்போதெல்லாம் நான் அங்கு போகும்போது; அண்ணே எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக்கொடுங்க அண்ணே என்றுதான் கேட்பார். பிறகு படிப்படியாக வளர்ந்துவிட்டார்.
பல வருடங்கள் கழித்து ஆறு படத்தில் அவருடன் நடித்தேன். அப்போது வடிவேலு உச்சக்கட்டமாக வளர்ந்துவிட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் டயலாக் பேசுவதற்கு முன்பு என்னிடம் வந்த அவர், 'என்னங்க டயலாக்லாம் பார்த்துட்டீங்களா' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று சொன்னேன். பிறகு நான் அதை சொல்ல ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் மாத்துங்க நல்லா இல்லை என்று சொல்லிக்கொண்டேஇருந்தார். ஒருகட்டத்தில் நான் அவரிடம், 'வடிவேலு நீங்கள் நல்ல நடிகர்தான். நான் முதலில் சொல்கிறேன். அதில் ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்கிறேன். இப்படி எதற்கு எடுத்தாலும் நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டேன். பிறகு ஒருவழியாக ஹரியின் துணையோடு டேக் ஓகே ஆனது" என்றார்.


Click it and Unblock the Notifications











