ஃபெப்சி தொழிலாளர்களுக்காக 1 கோடி ரூபாயை கொரோனா நிதியாக அள்ளித் தந்த லைகா நிறுவனம்!
சென்னை : கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் திரைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்ச குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது.
பிரபலங்கள் பலரும் உதவி செய்துவரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்பொழுது 1 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ஃபெப்சியில் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் என்ட்ரி
பல பிரம்மாண்ட மற்றும் தரமான படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது லைகா புரோடக்ஷன். கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த லைகா தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் காலூன்றியது.

படப்பிடிப்பை தொடங்க முடியாமல்
இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற 2. O வை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 லைகா தயாரித்து வந்தது. முதலில் கிரேன் உடைந்து விழுந்து உதவி இயக்குனர்கள் உட்பட பலர் பலியானது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி இன்று வரை இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க முடியாமல் உள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கைகள்
இதற்கிடையில் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் மற்றும் அந்நியன் ஹிந்தி ரீமேக் இயக்க சென்றதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ராங்கி,பன்னிக்குட்டி , சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களை தமிழில் தயாரித்து வரும் லைகா ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி மற்றும் ராம் சேது போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

கொரோனா நிதியாக
சிறிய பட்ஜெட் முதல் பிரம்மாண்ட படைப்புகள் வரை பல படைப்புகளை தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கும் லைகா ஃபெப்சி நிறுவனத்திடம் கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளது. கடந்த சில மாதமாக கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் படப்பிடிப்புகள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் திரைத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்க நடிகர்,நடிகைகள் உதவ முன்வந்தனர். இந்நிலையில் லைகா சேர்மேன் அலில்ராஜா சுபசேகரன் 1 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். அதற்கான காசோலையை லைகா நிறுவனத்தை சேர்ந்த தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இடம் காசோலையை ஒப்படைத்தனர்.


Click it and Unblock the Notifications











