லைகாவின் இரண்டு படங்களில் ரஜினி… நவம்பர் 5ம் தேதி ‘தலைவர் 170’ பூஜை… இயக்குநர் யார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. .
அதனை தற்போது லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் உறுதி செய்துள்ளார்.

லைகாவுடன் கூட்டணி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை தற்போது லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தலைவர் 170 பூஜை
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ் குமரன் உறுதி செய்துள்ளார். இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த ஆலோசனை செய்த தமிழ் குமரன், அதன்பிறகு ரஜினியின் படங்களை லைகா தயாரிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார். மேலும், அதில் ஒரு படத்தின் பூஜை அடுத்த மாதம் (நவம்பர்) 5ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார். இது ரஜினியின் 170வது படம் என்பதால், 'தலைவர் 170' என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்படும் என தெரிகிறது. ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இயக்குநர் யார்?
ரஜினியின் அடுத்த இரண்டு படங்களில் தலைவர் 170 அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதே ஆகும். இந்நிலையில், மணிரத்னம், சிபி சக்கரவர்த்தி தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இவர்களில் ஒருவர் தலைவர் 170 படத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரஜினியும் மணிரத்னமும் மீண்டும் இணைந்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அவர் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் சம்பளம்?
இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கு கமல் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். அதற்கு லைகா நிறுவனமும் ஓக்கே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ரஜினி நடிக்கும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து 250 கோடி சம்பளமும், ஜிஎஸ்டிக்கு என கூடுதலாக 50 கோடியும் கொடுக்க லைகா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்டேட் படி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மொத்தம் 300 கோடி ரூபாய் சம்பளம் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், இப்போதைக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதே ஆகும்.


Click it and Unblock the Notifications











