இந்தியன் 2வை முடிக்காமல் போகக்கூடாது.. இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஹைகோர்ட்டில் லைகா மேல்முறையீடு!
சென்னை: இந்தியன் 2 படத்தை முடிக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடைவிதிக்கக் கோரி லைகா நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

லாக்டவுன் காரணம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

அந்நியன் ரீமேக்
இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில ரிலாக்ஸேஷன்கள் அறிவிக்கப்பட்ட போதும், இந்தியன் 2 படப்பிடிப்பு மட்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் பணியில் இறங்கியுள்ளார்.

தடை விதிக்க வேண்டும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும் கூறியது.

இடைக்கால தடைக்கு மறுப்பு
மேலும் இவ்வளவு செலவு செய்தும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் லைகா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு
இந்நிலையில் இந்த வழக்கில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. பலகோடி செலவு செய்துள்ளதால் இந்தியன்-2 படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











