முதல்வர் நிவாரண நிதி...ரூ.2 கோடி அளித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ்
சென்னை : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் லேட்டஸ்டாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் நிர்வாகிகளான ஜிகேஎம் தமிழ்குமரன், நிருதன் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கி உள்ளனர்.
லைகா நிறுவன உரிமையாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் சார்பில் முதல்வரிடம் இந்த நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ், 2014 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் சார்பில் வட சென்னை, மாஃபியா, கத்தி உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் லைகா நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது.
லைகா நிறுவனம் இதுவரை தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படமாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் இருந்து வருகிறது. இதற்கு முன் ரஜினி நடித்த 2.0 படம் தான் லைகா நிறுவனத்தின் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்து வந்தது.
ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பாக ஷங்கர் - லைகா இடையேயான வழக்கு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











