டைரக்டர்கள் கவனத்திற்கு...கதை கேட்குகிறோம்...லைகா அழைப்பு
சென்னை : தமிழ் சினிமா தயாரிப்பு, விநியோகம் ஆகிய தொழில்களை மேற்கொண்டு வருகிறது சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா ப்ரொடக்ஷன்ஸ். தனது முதல் படமாக 2008 ல் பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரித்தார் சுபாஷ்கரன்.
பிறகு ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து 2014 ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யை வைத்து லைகா நிறுவனம் தனது படமான கத்தி படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கும், லைகா நிறுவனத்திற்கும் துவக்கத்தில் பலத்த எதிர்ப்பு நிலவியது.

லைகா நிறுவன படைப்புகள்
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, தியா, இப்படை வெல்லும், செக்க சிவந்த வானம், கோலமாவு கோகிலா, வடசென்னை, வந்தா ராஜாவாத்தான் வருவேன், காப்பான், தர்பார், மாஃபியா உள்ளிட்ட படங்களை தயாரித்தது. 2018 ல் மிகப் பெரிய பட்ஜெட்டில் 2.0 படத்தை தயாரித்தது.

லைகாவின் பிற மொழி படங்கள்
தற்போது பன்னிக் குட்டி, ராங்கி, டான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்தியில் குக் லக் ஜெர்ரி, ராம் சேது ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. தெலுங்கில் 2017 ல் கைதி நம்பர் 150 என்ற படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்தது.

ஷங்கருடன் மோதல்
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடிக்காமல் மற்ற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. சமரசம் பேச கோர்ட் அறிவுறுத்தியும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு லைகா தான் காரணம் என ஷங்கர் கூறி வருகிறார். ஆனால் ஷங்கர் தான் காரணம் என லைகா கூறி வருகிறது.

புதிய படத்திற்கு அழைப்பு
இந்தியன் 2 விவகாரம் முடிவுக்கு வராமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்களின் அடுத்த தயாரிப்பிற்கு கதை கேட்டு வருவதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டைரக்டர்கள் தங்களை பற்றிய விபரங்கள் மற்றும் கதைச்சுருக்கத்தை தங்களுக்கு அனுப்பும்படியும் கேட்டுள்ளது. இதனால் புதிய டைரக்டரை வைத்து புதிய படத்தை தயாரிக்கும் முடிவில் லைகா இருப்பது தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











