நா. முத்துக்குமார் இடதுசாரி.. அவரது இடம் தனித்துவமானது.. பாடலாசிரியர் அ.ப.இராசா பிரத்யேக பேட்டி
சென்னை: நா. முத்துக்குமார் தமிழ் சினிமா பாடல்களில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ஒரு பாடலை எப்படி எளிமையாக எழுத வேண்டும் என மற்றவர்களுக்கு தனது எழுத்தின் மூலம் பாடம் எடுத்தவர். கண்ணதாசன், வாலி எப்படி காலங்கடந்து நிற்கிறார்களோ அப்படி நா. முத்துக்குமார் நின்றுகொண்டிருக்கிறார். அதற்கு ஒரே காரணம் கவிஞருக்கான மிடுக்கோ, தோரணையோ அவரது தோற்றத்திலும் இல்லை எழுத்திலும் இல்லை. இன்றுவரை அவரது பாடல்கள் பலரது ஃபேவரைட். அவர் இன்று 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே வளர்ந்துவரும் பாடலாசிரியரான அ.ப.இராசாவிடம் முத்துக்குமார் குறித்து பேசினோம்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து; வீரநடை படத்தில் சீமானால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நா. முத்துக்குமார். முதல் படத்திலேயே சிறப்பாக எழுதி பிறகு செல்வராகவனால் அடையாளப்பட்டார். செல்வராகவனின் காதல் கொண்டேனில் ஆரம்பித்த அவரது பயணம் அவர் இறந்த பிறகும் நீண்டுகொண்டே செல்கிறது. அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே'.ஆம் அவரது பயணம் இப்போதும் நீள்கிறது எப்போதும் நீண்டுகொண்டே இருக்கும்.

முத்துக்குமாரின் ஸ்பெஷல்: பார்வையில் பட்ட விஷயங்களை பாடல்களாக மாற்றுவது ஒரு கலை என்றால் அந்த விஷயங்களை பலவந்தம் செய்து பாடலுக்குள் திணிக்காமல் ஒரு குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவது போல் லாவகமாக பாடலுக்குள் ஊட்டி பெரும் உணர்வை கடத்தக்கூடியவர் முத்துக்குமார். அதற்கு உதாரணமாக பல பாடல்களில் இருக்கும் வரிகளை சொல்லலாம். நா.முத்துக்குமாரின் எளிமையான வரிகளுக்கு பின்னால் வலிமையான கதைகள் பல இருக்கின்றன.
இன்று பிறந்தநாள்: காஞ்சிபுரத்தில் 1975ஆம் ஆண்டு பிறந்த அவர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். அதனால்தான் என்னவோ தந்தையின் பாசத்தை உரக்க பேசினார். அதேபோல் மிகச்சிறந்த கவிஞன் என்பதை தாண்டி மிகச்சிறந்த கணவராகவும், மிகச்சிறந்த தகப்பனாகவும் வாழ்ந்தவர் முத்துக்குமார். இன்று அவருக்கு 49ஆவது பிறந்தநாள்.
பாடலாசிரியர் அ.ப.இராசா: இன்று முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வளர்ந்துவரும் பாடலாசிரியரான அ.ப.இராசாவிடம் பில்மிபீட் தமிழ் சார்பாக பேசினோம். இராசா குட்டி பட்டாஸ் பாடல் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கு சென்றவர். அதனையடுத்து பேபி நீ சுகர் சுகருமா, என்னடி கண்ணம்மா, நான் தொட நீ மறைவதேன் உள்ளிட்ட பாடல்களை எழுதிய இராசா அடிப்படையில் ஒரு கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இளங்கலையை பிரஸிடென்ஸி கல்லூரியில் முடித்த அவர்; முதுகலையை மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் முடித்தார்.
இப்போது பல படங்களுக்கு பாடல்கள் எழுதிவரும் இராசா முத்துக்குமார் குறித்து நம்மிடம் பேசுகையில், "நா.முத்துக்குமார் பாடல்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது அவரது மொழியின் எளிமை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை எளிமையாக சொன்னால் மக்களிடம் சென்றுவிடும் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம். காதல் வளர்த்தேன், அன்புள்ள சந்தியா, ஒருநாள் வாழ்க்கை போன்ற பாடல்களில் உள்ள எளிமையை நான் மட்டுமின்றி இப்போது இருக்கும் இளைய பாடலாசிரியர்கள் கற்றிருக்கிறோம்.
முத்துவின் தனித்துவம்: முத்துக்குமாரின் தனித்துவம் என்று எல்லோரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். என்னை பொறுத்தவரை அவரது காதல் பாடல்களில் எப்போதும் ஒரு சோகம் இருக்கும். அதற்கு அடிப்படை காரணமாக, அவர் சிறு வயதிலேயே தாயை இழந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு மொழி நடை தேவைப்படும். அந்தக் காலகட்டத்தில் இருக்கும் பாடலாசிரியர்களில் யாராவது அதனை பூர்த்தி செய்வார்கள். அப்படி முத்துக்குமாரின் இடம் தனித்துவமானது. அந்த இடம் அப்படியே இருக்கிறது. முத்துக்குமாரால் திரை தமிழ் அடுத்த இடத்துக்கு சென்றது என்று சொல்லலாம்.
பொது தளத்தில் முத்துக்குமார்: அவரது காதல் பாடல்களை தாண்டி பொது தளம் சம்பந்தப்பட்ட பாடல்கள், தத்துவ பாடல்கள் குறைவாகத்தான் எழுதியிருப்பார். ஆனால் அவர் எழுதிய பாடல்களில் இடதுசாரி சிந்தனை இருக்கும். உதாரணமாக காக்கா முட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற கருப்பு கருப்பு பாடலை எடுத்துக்கொள்ளலாம். அதில் அவ்வளவு அரசியல் பேசியிருப்பார். அவர் ஒரு இடது சாரியாக இருந்தார் என்பது எனது எண்ணம்" என்று முடித்தார்.


Click it and Unblock the Notifications











