தலைமகனே கலங்காதே... பாடல் எழுதிய கவிஞர் காளிதாசன் மரணம்!
சென்னை: பிரபல கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.
தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல் எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார்.
ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற தலைமகனே கலங்காதே.. பாடல் இவர் எழுதியதுதான்.
108 அம்மன் பெயர்களை வைத்து இவர் எழுதிய 'ஒரு தாலி வரம்...' பாடல் பிரபலமானது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் தஞ்சையில் உள்ள வீட்டுக்கு வந்தார். நேற்று உடல்நிலை மோசமாகி காலமானார்.
அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் மூலகொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.
உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக எண். 50 நல்லப்ப வாத்தியார் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்ற விலாசத்தில் அவரது மகன் பாலசுப்ரமணியன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த காளிதாசனுக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.


Click it and Unblock the Notifications











