Kavignar Kannadasan: பாடலாசிரியருக்கான முதல் தேசிய விருது பெற்றவர்.. கண்ணதாசன் நினைவுதினம் இன்று!
சென்னை: கவிஞர் என அனைவராலும் கொண்டாடப்பட்டவர் கவிஞர் கண்ணதாசன். இன்றைய தினம் அவரது 42வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், எழுத்தாளர், டயலாக் ரைட்டர் என சினிமாவில் பன்முகம் காட்டியவர் கண்ணதாசன்.
கடந்த 1968ம் ஆண்டில் குழந்தைக்காக என்ற படத்தின் தேவன் வந்தான் என்ற பாடலுக்காக கண்ணதாசனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

கவிஞர் கண்ணதாசனின் நினைவுதினம் இன்று: கவிஞராக கொண்டாடப்பட்டவர் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். தனது 54வது வயதிற்குள் சுமார் 4500 படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் கண்ணதாசன். 6 படங்களை தயாரித்துள்ளார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல படங்களுக்கு கதை -வசனம் எழுதியுள்ள கண்ணதாசன், 7 பத்திரிகைகளில் ஆசிரியர், எழுத்தாளர் போன்ற பொறுப்புக்களையும் வகித்துள்ளார். பல கவியரங்கங்களில் இவரது பேச்சுக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
அரசவை கவிஞராக இருந்த கவிஞர் கண்ணதாசனின் 43வது நினைவுதினம் இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பிறை படத்தின் கண்ணே கலைமானே என்ற பாடல்தான் கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடல். முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி பாடல் என்று தீர்மானித்திருந்தார் கண்ணதாசன். இந்தப் பாடலோடு, திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, அதிகமான நூல்களை எழுதி முழுநேர எழுத்தாளராக மாற திட்டமிட்டிருந்தார் கண்ணதாசன். ஆனால் காலம் அவரது கனவை நிறைவேற்றாமலேயே அவரை தன்னிடம் அழைத்துக் கொண்டது.
நடிகராக விரும்பி தன்னுடைய 16 வயதிலேயே சென்னைக்கு ஓடிவந்தவர் கண்ணதாசன். ஆனால் முதலில் அவருக்கு எழுத்தாளராகவே வாய்ப்பு கிடைத்தது. அதையும் விரும்பி ஏற்றுக் கொண்டார். பல படங்களில் இவரை சில கேரக்டர்களில் பார்க்க முடிந்தது. உலகிலேயே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிக் கொண்டவர் கண்ணதாசனாகத்தான் இருக்கக்கூடும். தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இதை அவர் எழுதிவிட்டார்.
கண்ணதாசனின் முதல் பாடல் கன்னியின் காதலி என்ற படத்தில் இடம்பெற்ற கலங்காதிரு மனமே என்பதாகும். அவர் இறுதியாக எழுதிய பாடல் மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு பாடலின் காட்சியை விவரித்துவிட்டால், குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் அந்த பாடலை எழுதிக் கொடுக்கும் திறமையை இயல்பாகவே பெற்றிருந்தார் கவிஞர் கண்ணதாசன்.
கண்ணதாசனுக்கு தானெழுதிய பாடல்களில் மிகவும் பிடித்தமானது தப்புத் தாளங்கள் படத்தில் இடம்பெற்ற என்னடா பொல்லாத வாழ்க்கை, மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் இடம்பெற்ற சம்சாரம் என்பது வீணை, நூல்வேலி படத்தில் இடம்பெற்ற மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மற்றும் சுவாமி ஐயப்பன் படத்தில் இடம்பெற்ற திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே போன்றவையே. இந்தப் பாடல்களை பலமுறை அவர் கேட்டு ரசிப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
எழுத்தாளராகவும் மிகப்பெரிய உயரங்களை தொட்டவர் கண்ணதாசன். இவரது சுயசரித நூலான வனவாசம், தமிழில் அதிகமாக விற்பனையான நூல் என்ற பெருமையை பெற்றது. மிக எளிமையாக சாதாரணமானவர்களையும் கவரும் வகையில் எழுத்து நடையை தன்னுடைய பாடல்களிலும், நூல்களிலும் கொண்டிருந்தவர் கண்ணதாசன். வாழ்க்கையில் நொந்துப்போனவர்களுக்கு இவரது தன்னம்பிக்கையூட்டும் பாடல்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது என்பது நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











