புலி ஒன்றும் பெட் அனிமல் இல்லை.. இனிமேலும் இப்படியெல்லாம் பண்ணாதீங்க.. தாமரை, சின்மயி காட்டம்!
சென்னை: தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோக்களில் ஒன்று தாய்லாந்தில் உள்ள சுற்றுலாப் பூங்கா ஒன்றில் இருக்கும் புலி, அங்கு சுற்றுலாவுக்கு வந்த இளைஞர் ஒருவரை தாக்குவது தொடர்பாகத்தான். அடிப்படையில் இந்த சம்பவம் தாய்லாந்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற விலங்குகள் பூங்காவான ஃபூகெட் பூங்காவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் புலியால் தாக்கப்பட்ட நபர் இந்தியர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாடலாசிரியர் தாமரை புலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் பாடலாசிரியர் தாமரையின் இந்த கருத்துக்கு பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த வீடியோ இணையத்தில் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் புலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். எக்ஸ் பக்கத்தில் சித் என்ற பெயரில் இருக்கும் வன விலங்கு ஆர்வலர் தாய்லாந்தில் புலிகள் எப்படி மனிதர்கள் புகைப்படம் எடுக்கும் அளவிற்கு பழக்கப்படுத்துகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பதிவில், " தாய்லாந்தில் ஒரு புலியை அதன் கூண்டுக்கு வெளியே தொட்டு உணரவேண்டும் என்ற ஆர்வத்தால் பலர் ஈர்க்கப்பட்டாலும், தாய்லாந்து சுற்றுலாவின்மூலம் புலிகள் மோசமான நிலையில் இருக்கும் யதார்த்தங்களை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். பூங்காக்களில் உள்ள இந்தப் புலிகளில் பல புலிகள் சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் மூலம் பெறப்படுகின்றன. புலிக்குட்டிகள் லாவோஸ் மற்றும் மியான்மரின் எல்லைகள் வழியாக கடத்தப்பட்டு தாய்லாந்தின் சுற்றுலாத் துறைக்கு விற்கப்படுகின்றன. அங்கு அவை காட்டு விலங்குள் போல் நடத்தப்படாமல், ஏதோ உயிரற்ற பொருட்கள் போல நடத்தப்படுகின்றன.
போதை மருந்துகள்: தற்போது வேகமாக பரவி வரும் வீடியோவில் காணும் புலிகளின் அமைதியான மற்றும் வலுவற்ற நடத்தை இயற்கையானது அல்ல. புலிகள் காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வேட்டையாடி மிருகங்கள். சுற்றுலா பயணிகளைக் கவரப் பயன்படுத்தப்படும் புலிகள் பெரும்பாலும் மயக்க மருந்து அல்லது போதை மருந்து கொடுக்கப்பட்டு, உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி செல்ஃபி எடுக்கும்படி, புலிகளை, அது குட்டிகளாக இருக்கும்போதே வலுக்கட்டாயமாக அடக்குகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் இந்த புலிகளை செல்லப் பிராணிகள் போல அழைத்துச் செல்வதற்கு முன்னர், அவை நடமாடுவதற்கு இடமில்லாத, உடலை தன் விருப்பம் போல அசைத்துப் பார்க்க கூட இடமில்லாத சிறிய கூண்டுகளில் அடைத்து வைக்கப்படுகிறது. அந்த புலிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் மோசமானவைதான்.
புலிகளுக்கு நடக்கும் கொடுமைகள்: புலிகளை அவை குட்டிகளாக இருக்கும் காலத்தில் இருந்து இது போல அடைத்துவைத்து உணவுகள் கொடுக்கப்படுவதால், அது அவற்றின் இயற்கையான உள்ளுணர்வை பலவீனப்படுத்தவும், அவற்றின் பலத்தையும் குறைக்கும் முயற்சி. இது மட்டும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு புலிகளின் ரோமங்கள் மிகவும் துடிப்பாகத் தோன்ற, அவை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வகையான விளக்குகளின் கீழ் வைக்கப்படுகின்றன. இந்த விளக்குகளின் கீழ் புலிகள் இரவு நேரங்களிலும் இருக்கின்றன. இதனால் புலிகள் பல நாட்கள் சரியான தூக்கமின்மையாலும் அவதிப்படுகின்றன.
40 இறந்த குட்டிகள்: ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாக இருந்த தாய்லாந்தின் காஞ்சனபுரியில் உள்ள பிரபலமற்ற புலி கோயில் கடைசியாக 2016 இல் மூடப்பட்டது. ஒருமுறை விசாரணையில் ஃப்ரீசர்களில் 40 இறந்த புலி குட்டிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். இந்த சம்பவத்தின் மூலம் பரவலான சட்டவிரோத இனப்பெருக்கம் மற்றும் லாவோஸ் எல்லையில் புலிகள் கடத்தல், ஆன்மீக மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலான சந்தைப்படுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள கொடூரமான உண்மை வெளியே வந்தது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தாமரை மற்றும் சின்மயி: இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக பாடலாசிரியர் தாமரை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " விலங்குகளை சித்திரவதை செய்வதை நிறுத்துங்கள். காட்டு விலங்குகள் உங்கள் செல்லப்பிராணிகள் அல்ல. செல்ஃபி மேனியா அருவருப்பானது. விலங்குகளை காட்டிலேயே விட்டுவிடுங்கள். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் முட்டாள்களே" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பாடகி சின்மயி அக்ரி என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











