மேகமாய் வந்து மறைந்து போன கவிஞர் முத்து விஜயன் - திரை உலகினர் அதிர்ச்சி
சென்னை: மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான முத்து விஜயன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை காலமானார். இயக்குநர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடல் மூலம் பிரபலமான கவிஞரானவர் முத்துவிஜயன். பாடலாசிரியர்கள் பலரும் இளம் வயதிலேயே மரணமடைவது சினிமா பாடலாசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம் பெற்ற மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடல் மூலம் பிரபலமான கவிஞரானவர் முத்துவிஜயன். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபு தேவா நடித்த, பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் இடம் பெற்ற கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலும், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்த படங்கள் உட்பட 800 பாடல்கள் எழுதியுள்ளார். அதோடு வசனகர்த்தா, உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

இவர் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக் குமாரின் நெருங்கிய நண்பரும் கூட. முத்து விஜயன் தமிழ் சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டியவர். இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று நா. முத்துக்குமார் அடிக்கடி சொல்வதுண்டாம். மேலும் இவரைப் பற்றி பல சினிமா நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட மேடைகளில் சொன்னதும் உண்டு.
கவிஞர் முத்து விஜயன் கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்ற பிறகு, சமீப காலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்திலேயே தங்கியிருந்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கு மறைந்தார். தகவல் அறிந்த பாடலாசிரியர்கள் சங்க தலைவர் தமிழமுதன், சீர்காழி சிற்பி, இயக்குநர்கள் பாலி சீரங்கம், குகை மா.புகழேந்தி, கீரா, முகிலன், இசை கலைவாணன் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
வளசரவாக்கம் இடுகாட்டில் அவரது அண்ணன் அருளானந்தன் இறுதிச் சடங்குகள் செய்து தீ மூட்டினார். 48 வயதான முத்துவிஜயன் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஆகும்.
காலத்தின் கொடுமையோ என்னவோ தெரியவில்லை. தமிழகத்தின் சிறந்த பாடலாசிரியர்கள் பெரும்பாலானவர்களை மிகக்குறைந்த வயதிலேயே காலன் அழைத்துக் கொள்கிறான். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முத்துக்குமார் தற்போது முத்து விஜயன் என இன்னும் சிலர் மிகக்குறைந்த வயதில் மரணம் அடைவது காலத்தின் சாபக் கேடு தான்.


Click it and Unblock the Notifications











