Armstrong: வெட்டிக் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. பாடலாசிரியை உமா தேவி உருக்கமான பதிவு
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்தியாவின் தேசிய கட்சிகளில் ஒன்றாக இருக்ககூடிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு அருகில் 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று அதாவது ஜூலை 5ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் 8 மணி அளவில் சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனங்களைத் தெரிவித்ததுடன், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை அதாவது ஜூலை 7ஆம் தேதி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்ட செய்தி கேட்டதும் இயக்குநர் பா. ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த செய்தியைக் கேட்டதும் கதறி அழுதார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் நடிகர் தீனாவும் மருத்துவமனைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
முன்விரோதம்: அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரப்பட்டது. நேற்று இரவில் இருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்களும் குவிந்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்ததாக, 6 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவே சரண் அடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின்: இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்: இன்று அதாவ்து ஜூலை 6ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங் உடலை பொது இடத்தில் புதைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாடலாசிரியை உமா தேவி: இந்நிலையில் பா. ரஞ்சித் படங்களில் பாடல் எழுத ஆரம்பித்து அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் பாடல் எழுதி வரும் பாடலாசிரியை உமா தேவி, கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்குடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “நாங்கள் இளைப்பாற ஓடிவரும் பெரும் நிழல் அண்ணா நீ, அறம் கொண்ட தலைவன்” என பதிவிட்டுள்ளார். மேலும் பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் எனவும் கிங் ஆஃப் நார்த் மெட்ராஸ் எனவும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











