ஷங்கரிடம் கோபப்பட்ட பாடலாசிரியர் வாலி.. ஏன் தெரியுமா? - குட்டி ப்ளாஷ்பேக்
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் பாடலாசிரியர் வாலி ஒரு பாடலின் ஆரம்ப வரிகளுக்காக கோபப்பட்டது தெரியுமா?.. ஒரு குட்டி ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவில் பாடல்களை எப்போதும் பிரிக்கமுடியாது. ஏனெனில் பாடல்கள் தமிழர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. இதனால் சினிமாவில் பல பாடலாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அவர்களில் எப்போதும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி.

5 தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய வாலி
பாடலாசிரியர் வாலி கண்ணதாசன், உடுமலை நாராயண கவி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர். இவர் எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியது என இப்போதும் நினைப்பவர்கள் உண்டு. ஏன் கண்ணதாசனே கூட வாலியிடமே நீ எழுதிய பாடலை நான் எழுதிய பாடல்னு நினைச்சிருக்கேன் என கூறியதாக செய்தியும் உண்டு. வெறும் தத்துவ பாடல்களை மட்டும் எழுதாமல் அனைத்து ஜானரிலும் அடித்து ஆடக்கூடியவர் வாலி.
சிவாஜி - எம்ஜிஆருக்கு எழுத ஆரம்பித்த வாலி ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர்.

இளமை ததும்பும் வாலியின் வரிகள்
வாலிக்கு வயதானாலும் அவரது வரிகளுக்கு எப்போதும் வயது ஆனதில்லை. கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி என தற்போது காதல் சென்றுகொண்டிருக்கும் நடைமுறையை முன்னமே கணித்து கூறியவர் வாலி. தனது இறுதிக்காலம் வரை அப்டேட்டாகவும், இளமையாகவும் தனது வரிகளை எழுதியதால்தான் அவரை அனைவரும் வாலிப வாலி என்று அழைக்கிறார்கள். அப்படி இருந்ததால்தான் பல இயக்குநர்களுடன் நெருக்கமாக அவரால் பயணிக்க முடிந்தது. பலருக்கு பாடல்களையும் எழுத முடிந்தது.

பிரமாண்ட இயக்குநரின் முதல் படம்
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருப்பவர் ஷங்கர். இவரது முதல் படம் ஜென்டில்மேன். இப்படத்தில் முதலில் கமல் ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையில் அவருக்கு சில நெருடல்கள் இருந்ததால் அதிலிருந்து விலகியது. அதன் பிறகு அர்ஜுன் கமிட்டானார். மிகப்பெரிய ஹிட்டான இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். வாலியும், வைரமுத்துவும் பாடல்கள் எழுதியிருந்தனர்.

ஷங்கரிடம் கோபப்பட்ட வாலி
இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானவை. குறிப்பாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடல் இன்றுவரை பலரையும் ஆட்டம் போடவைப்பது. அந்தப் பாடலை எழுதியவர் வாலி. அந்தப் பாடலை எழுதிவிட்டு ஷங்கரிடம் படித்து காண்பிக்கும்போது, "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" என்ற வரிகள் வேண்டாம். அதற்கு பதிலாக வேறு எழுதிக்கொடுக்கும்படி வாலியிடம் ஷங்கர் கேட்க; உடனே வாலியும் வேறு வரி எழுதிக்கொடுத்தாராம்.
பாடல் பதிவின்போது வாலி ஸ்டூடியோவுக்கு சென்றபோது, அவர் முதலில் எழுதிக்கொடுத்த 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே'வரியை பாடகர் பாடிக்கொண்டிருந்தாராம். அதைப் பார்த்து டென்ஷனான வாலி, இயக்குநர் ஷங்கரிடம் 'இந்த வரிகளுக்கு பதில் வேறு கேட்டாய் அதைத்தான் நான் எழுதிக்கொடுத்தேனே. இப்போது ஏன் அந்த வரிகளை பயன்படுத்தாமல் ஏற்கனவே எழுதிய வரிகளை பயன்படுத்துகிறாய். இனி உன் படத்துக்கு எப்போதும் பாட்டு எழுதமாட்டேன்" என கோபமாக கூறிவிட்டு வாலி வந்துவிட்டாராம்.
வாலியின் கோபம் அந்த நேரத்திற்கானது மட்டுமே. ஏனெனில் அதற்கு பிறகு காதலன், பாய்ஸ் என ஷங்கர் இயக்கிய பல படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











