எல்லா மாநிலங்களிலும் ஹேமா கமிட்டி வேண்டும்.. புதிய இந்தியாவிற்கான துவக்கம் இது.. வைரமுத்து பேச்சு!
சென்னை: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை அதிர்வலைகளை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் பாகுபாடில்லாமல் பல விஷயங்களை பேசி வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ஹேமா கமிட்டி குறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து சினிமாவில் மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுவதாக தெரிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரளாவில் பாலியல் தொல்லைகள் குறித்த புகாரையடுத்து கடந்த 2017ம் ஆண்டிலேயே ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் தன்னுடைய அறிக்கையை இந்த கமிட்டி வெளியிட்ட நிலையில் 5 ஆண்டுகளை கடந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கமிட்டியின் அறிக்கை வெளியானது. இந்த ஹேமா கமிட்டி பெண்களின் குறிப்பாக திரை துறையில் செயல்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தாக்கத்தை கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது.
கவிஞர் வைரமுத்து: இந்நிலையில் நடிகைகள் உள்ளிட்ட பலரும் முன்னதாக நாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை வெளிப்படையாக பேசி வருகின்றனர். நடிகர்கள், நடிகைகள் என அனைத்து தரப்பினரும் ஹேமா கமிட்டி குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல மற்ற மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்கள் சுரண்டப்படுகிறார்கள்: சினிமாவில் மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுவதாகவும் மற்ற துறைகளிலும் இத்தகைய கமிட்டிகள் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்கள் சுரண்டப்படுவதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதிலிருந்து அவர்கள் விடுபட பெண்மை என்ற கருத்தை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்மை, பெண்மை என பிரிக்கப்படுவது பிரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் இருவரும் சரிசமம் தான் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் ஒருவர் மற்றவரை சீண்டுவது ஒரு பாலினம் பலவீனமானது என்பதை காட்டுவதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பெண்ணினம் பலவீனமானது அல்ல: பெண்ணினம் பலவீனமான பாலினம் அல்ல என்றும் இந்திய பள்ளிக்கல்வித்துறை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பயிற்சியை கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விளையாட்டு, எழுத்துப் பயிற்சி மட்டும் அவர்களுக்கு போதாது என்று தெரிவித்துள்ள வைரமுத்து, ஒரு புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகவே தான் ஹேமா கமிட்டியை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். பெண்களுக்கு பள்ளிப்படிப்பிலேயே அடிப்படை பாதுகாப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டியதன் அவசியத்தை காலங்காலங்களாக பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில் தற்போது வைரமுத்துவும் அதே கருத்தை முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











