ஹே சந்திரயான் நிலவில் நீ மடியேறு..நாளை நாங்கள் குடியேற..வைரமுத்து ட்வீட்!
சென்னை: இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 குறித்து கவிப்பேரசு வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
2019-ல் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர்,தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. தற்போது அங்கு சென்றுள்ள சந்திரயான்-3 லேண்டருக்கும் தகவல் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்பிட்டர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் அடிப்படையாகக் கொண்டு லேண்டர் கலனை நிலவில் பத்திரமாக தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரம்காட்டி உள்ளது.
லூனா 25: ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதனால், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்திற்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ரஷ்யா தவறவிட்டதை சந்திரயான்3 விண்கலத்தின் மூலம் சாதித்துக்காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.
சந்திரயான் 3 லேண்டர்: இதனால் சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம் உலக நாடுகளிடையேயும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறியுள்ள சந்திரயான் 3 லேண்டர் கலன் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்கவுள்ளது.
நம்பிக்கையுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள்:கடந்த முறை சந்திரயான்2 திட்டம் இந்த கட்டத்தில்தான் தோல்வி அடைந்ததால், அந்த அனுபவங்களின் அடிப்படையில், சந்திரயான்3 லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த முறை லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வைரமுத்து கவிதை: இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான் 3 குறித்து,கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

நேரம் நெருங்க நெருங்க
மூளைக்குள் வட்டமடிக்கிறது
சந்திரயான்
நிலவில் அது
மெல்லிறக்கம் கொள்ளும்வரை
நல்லுறக்கம் கொள்ளோம்
லூனா நொறுங்கியது
ரஷ்யாவின் தோல்வியல்ல;
விஞ்ஞானத் தோல்வி
சந்திரயான் வெற்றியுறின்
அது இந்திய வெற்றியல்ல;
மானுட வெற்றி
ஹே சந்திரயான்!
நிலவில் நீ மடியேறு
வைரமுத்துவின் இந்த கவிதைக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











