ஒரே நாளில் 2 நண்பர்களை காவு வாங்கிவிட்டது கொரோனா… பாடலாசிரியர் விவேக்கின் கண்ணீர் பதிவு !
சென்னை : பாடலாசிரியர் விவேக், ஒரே நாளில் மிகவும் நெருங்கிய இரு நண்பர்களை இழந்துவிட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட பாடலாசிரியரான இவர், எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்.
அந்த படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப்பெற்ற பாடல்களை இவர் எழுதியுள்ளார்.

ஆளப்போறான் தமிழன்
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர் தான் விவேக். இவர் மெர்சல் படத்தில் எழுதிய ஆளப்போறான் தமிழன் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தாறுமாறாக ஹிட்டடித்தது. அதேபோல சிங்கப் பெண்ணே பாடலும் விவேக்கின் கற்பனையில் உருவாகிய பாடல் வரிகள் தான். இந்த பாடல் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் வெகுவாக கவர்ந்தது.

பல வெற்றி பாடல்கள்
நடிகர் சித்தார்த் நடித்து வெளிவந்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் விவேக். இந்த படத்தைத் தொடர்ந்து இறுதிச்சுற்று, இறைவி, கபாலி, பரியேறும் பெருமாள், ஒரு நாள் ஒரு கூத்து என பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இறுதிச்சுற்று படத்தில் வரும் ஏய் சண்டக்காரா பாடல், ஒரு நாள் ஒருகூத்து படத்தில் இடம் பெற்ற அடியே அழகே என்ற பாடல், காதல் வசப்பட்டவர்களுக்கும், இளைய தலைமுறைக்கும் மிகவும் பிடித்தமான பாடலாகும்.

2 நண்பர்களை இழந்தேன்
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் சோகமான பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான 2 நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல இந்த கடினமான கால கட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு என்று கூறியுள்ளார்.

அலட்சியம் வேண்டாம்
பாடலாசிரியர் விவேக்கின் நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா என்னும் கொடூரமான அரக்கனின் கையில் நாம் அனைவரும் சிக்கி உள்ளோம். நமக்கு மிகவும் நெருங்கிய உறவுகளையும், நண்பர்களையும் நாம் இழந்து வருகிறோம். ஆகையால் அலட்சியமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்.


Click it and Unblock the Notifications











