Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க உட்கார்ந்து பேசிய இடம் எது தெரியுமா? - மனம் திறக்கும் ஜூனியர் பாலையா
சென்னை: புதுக்கட்சி தொடங்குவதற்கு முன்பு என்னுடைய அப்பாவிடம் தீவிரமாக ஆலோசித்துவிட்டு தான், எம்.ஜி.ஆர் கட்சியை ஆரம்பித்தார் என்று, டி.எஸ்.பாலையா பற்றி அவருடைய மகன் ஜூனியர் பாலையா தெரிவித்தார்.
ஜூனியர் பாலையா நம்முடைய ஃபிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவருடைய தந்தையின் பிறந்த நாளை ஒட்டி அவரைப்பற்றி நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவற்றை உங்களுக்கு அளித்துள்ளோம்.
அந்தக் காலத்து நடிகர்களுக்கு எல்லாம் ஊர் பற்று ஜாஸ்தி இருந்தது அதனால தான் தன்னோட பேருக்கு முன்னாடி தங்களோட ஊர் பேரையும் சேத்துகிட்டாங்க. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் தான் சுருக்கமா எம்.ஜி.ஆர்ன்னு சொல்றோம்ல அது மாதிரி தான்.
நண்பர் சுரேஷ் சந்திராவின் தாயார் மரணம் - கூடவே இருந்த ஆறுதல் சொன்ன அஜீத்
என்னோட அப்பாவோட சொந்த ஊரு திருநெல்வேலி மாவட்டத்துல இருந்த தூத்துக்குடி பக்கத்துல இருக்குற சுண்டங்கோட்டை (இப்பொழுது தூத்துக்கடி மாவட்டம்). அதனால எங்கப்பா பேரு திருநெல்வேலி சுண்டங்கோட்டை பாலையா. இதை சுருக்கி டி.எஸ்.பாலையா'ன்னு வச்சிகிட்டாரு.
இதை நான் ஏன் சொல்றேன்னா, நிறைய பேர் தப்பு தப்பா தகவல் சொல்றாங்க. ரொம்ப ஃபேமசான ஒரு எழுத்தாளர் கூட எங்கப்பாவ பத்தி ஒரு புக்ல எழுதியிருந்தாரு. அதுல டி.எஸ்.பாலையா ரொம்ப பெரிய வீடு வச்சிருந்தாரு. அவருக்கு ஜூனியர் பாலையான்னு ஒரு மகன் இருந்தாரு.
ஆனா அந்த வீடும், அவரும் எங்க போனாங்கன்னே தெரியலைன்னு எழுதியிருந்தாரு. நான் என்ன தொலைஞ்சா போயிட்டேன். உயிரோட தானே இருக்கேன். நான் அவருக்கு ஃபோன் போட்டு, ஏன் சார், நான் என்ன செத்தா போயிட்டேன். நீங்க உடனே அதை மாத்தி எழுதுங்கன்னு சொன்னேன்.
அதுக்கு அவர், சார் அப்படி எழுதுனா நான் எழுதுனது பொய்யாகிடுமேன்னு சொன்னார். அதுக்கு நான் என்ன சார் பண்றது. அதனால தான் நான் இந்த விளக்கத்த சொல்லவேண்டியதிருக்கு, என்று தன்னுடைய அப்பாவின் பெயருக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா.
எங்கப்பா பிறப்பால் நாடார் சமூகமா இருந்தாலும், வளர்ந்தது எல்லாமே பிள்ளைவாழ் வீட்டுல தான். எங்க தாத்தாவோட குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம் தான். தாத்தாவுக்கு கலைக் கண்ணோட்டம் எல்லாம் கிடையாது.
அந்தக் காலத்துல எல்லாம் தெருக்கூத்துதான். அப்போ எங்கப்பாவுக்கு பத்து வயசு தான் இருக்கும். அதைப் பாத்து தான் எங்கப்பாவுக்கு நாடகத்துல நடிக்கணும்னு ஆசை வந்திச்சி. ஒரு நாள் தெருக்கூத்தை வேடிக்கை பாத்த எங்கப்பாவ அடியோ அடின்னு அடி பின்னிட்டாரு. இருந்தாலும் அவரோட நாடகத்துல நடிக்கணும்கிற ஆசை அடங்கல.
ஒரு நாள் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு கிளம்பிட்டாரு. கிளம்பிட்டாலும் தாமிரபரணி ஆத்த கடந்துதான் இந்தப் பக்கம் வரணும். அப்படி ஆத்துல நீந்தி வரற்ப்போ ஆத்துத் தண்ணியில மாட்டிக்கிட்டாரு. உடனே அங்கிருந்தவங்க காப்பாத்தி இந்த கரையில கொண்டுவந்து விட்டாங்க.
அப்ப அங்கன ஒரு ஓட்டல் நடத்திட்டு இருந்த பிள்ளைவாழ் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம், இவர்கிட்ட விவரம் கேட்டப்போ, நான் ஒரு அநாதைன்னு சொல்லிட்டாரு. அப்புறம் அவங்கதான் வளர்த்து ஸ்கூல்ல படிக்க வச்சாங்க. அவரைப் பத்தி இப்ப நெனச்சாலும் பிரமிப்பா இருக்கும்.
எங்கப்பா படத்துல நடிக்கற மாதிரி காமெடியன் கிடையாது. சடனா சீரியசான ஆளா மாறிடுவாரு. அவ்வளவு கோவக்காரரு. அந்தக்காலத்துல இருந்தே அப்பாவும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். அதுவும் எம்.ஜி.ஆரோட அண்ணன் சக்ரபாணிக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.
அப்போ எம்.ஜி.ஆர் ராயப்பேட்டை வீட்டுல இருக்குறப்போ அப்பா அவர பாக்க போவாரு. அங்கதான் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்னு பெரிய போர்டு போட்டு இருக்கும். அங்க எம்.ஜி.ஆரோட அண்ணன் சக்ரபாணி முன்னாடி உக்காந்திட்டு இருப்பார். சக்ரபாணி சாரோட மகன் பாலுவும் நானும் கிளாஸ்மேட்ஸ். சாந்தோம் ஸ்கூல்ல தான் படிச்சோம். சினிமாவுல இருக்குறவங்களோட பசங்க எல்லாம் அங்கதான் படிப்பாங்க.
எனக்கு என்ன ஒரு ஆச்சரியம்னா இவங்களோட நட்பு அவங்களோட இறுதிக்காலம் வரைக்கும் நீடிச்சது. எங்கப்பா, சக்ரபாணி சார், எம்.ஜி.ஆர் அப்புறம் நம்பியார் இவங்க நாலு பேரும் கடைசி வரைக்கும் நட்பாவே இருந்தாங்கன்னா பாத்துக்கோங்க.
அந்த காலத்துல எங்கப்பா படம்லாம் எடுத்துக்கிட்டு இருந்தாரு. அப்போ எங்க கம்பெனியில தான் முக்தா சீனிவாசன் சார் அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு. ஒரு நாள் எல்லீஸ்.ஆர்.டங்கன் சென்னைக்கு வந்தப்போ கன்னிமாரா ஹோட்டல்ல தங்கி இருக்குறத கேள்விப்பட்டு அவர பாக்க போனோம். இவருதான் எம்.ஜி.ஆர். எங்கப்பாவை வச்சி சதி லீலாவதி, மந்திரி குமாரி, எங்கப்பாவை வச்சி டூ பிரதர்ஸ், மீரா என சில படத்தை எடுத்தவரு.
நாங்க அவரை பாக்க வந்திருக்கிறோம்கிறத கேள்விப்பட்டு, வரச்சொன்னாரு. அவரு என்னைப் பாத்த உடனேயே, அந்த தள்ளாத வயசுலேயும் எழுந்துவந்து என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு. என்ன கொஞ்ச நேரம் உத்து பாத்துட்டு, அப்பிடியே உங்கப்பா மாதிரியே இருக்கீங்க (You Look Like Your Father) அப்பிடின்னாரு.
எங்கப்பாவ பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி ரெண்டு பேர்கிட்டயும் ஒரே மாதிரிதான் நட்போட இருந்தாரு.
எங்கப்பா இறந்து, ரொம்ப நாள் கழிச்சி நான் எம்.ஜி.ஆரை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போ அவர நான் போய் பாத்தேன். அப்போ அவர் என்கிட்ட சொன்ன வார்த்தை, நீ என்ன உங்கம்மாவோட கூடப்பிறந்த சகோதரனா நெனச்சிக்கோ, என்ன வேணுமோ கேளுன்னாரு.
நான் தினமும் எம்.ஜி.ஆரோட ஆஃபிஸுக்கு போய் பேசுவேன். அப்போதான் அங்க ஐசரி வேலனோட நட்பு கிடைச்சது. நானும் அவரும் எம்.ஜி.ஆர் கிளம்பி வீட்டுக்கு போனபிறகும் கூட உக்காந்து பேசுவோம்.
அப்போ ஒரு நாள், எம்.ஜி.ஆரோட நிழல் மாதிரி இருக்குற மாணிக்கம் பிள்ளைங்குறவரு, அப்பாவ பாக்க வந்தாரு. வந்தவரு, எம்.ஜி.ஆர் கலந்துகிட்ட கூட்டத்துல அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை நெனச்சி மனசு வருத்தப்பட்டத அப்பாகிட்ட வந்து சொல்லிட்டாரு.
உடனே அப்பாவுக்கு வந்ததே கோபம். எவன்டா அது, யார்றா அது அவர (எம்.ஜி.ஆர்) அவமானப்படுத்துனது, அப்பிடின்னு கத்திட்டு எந்திரிச்சாரு. உடனே அப்பாவும் எம்.ஜி.ஆரும் ஃபோன்ல பேசிக்கிட்டாங்க. ஏன்னா எம்.ஜ.ஆருக்கு ஏற்பட்ட அவமானம் தனக்கு ஏற்பட்ட அவமானமா நெனச்சாரு அப்பா. அப்பா உடனே கிளம்பி எம்.ஜி.ஆரை பாக்க கிளம்பிட்டாரு. அப்பா கார்ல கிளம்பி, இன்னிக்கு சன் டிவி இருக்குற எம்.ஆர்.சி நகர்ல வச்சி ரெண்டு பேரும் மீட் பண்ணினாங்க.
அங்க வச்சி தான் ஒரு முக்கியமான முடிவு எடுத்தாங்க. அதாவது புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கணும்னு. இது இன்னிக்கு இருக்குற ஆளுங்களுக்கு பெரும்பாலும் தெரியாது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போறாருங்கிறதப் பத்தி விசயம் தெரிஞ்சவங்கள்ள எங்கப்பாவும் ஒருவர்.
அப்போ எங்கப்பா ஒரு வார்த்தை சொன்னார். நீ தாராளமா கட்சி ஆரம்பி, ஆனா பின்னாடி திரும்பி பாத்துக்கோ, அப்பிடின்னாரு. எம்.ஜி.ஆரும் அதை சரின்னு ஏத்துக்கிட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டாங்க. அதுக்கப்புறம், எங்க வீட்டுக்கு வந்தப்புறம், மாணிக்கம் பிள்ளைகிட்ட நான் என்ன நடந்ததுன்னு கேட்டேன், அதுக்கு அவர், இன்னிக்கு தான்டா நான் உங்கப்பா கண்ணுல இருந்தும் எம்.ஜி.ஆர் கண்ணுல இருந்தும் கண்ணீர் வந்ததை பார்த்தேன்னு சொன்னாரு.
அதே மாதிரி, இன்னிக்கு மாதிரி எல்லாம் அப்ப கிடையாது. திரையுலகம் சம்பந்தப்பட்ட ஒரு கல்யாணம்னா பத்திரிக்கைய நேரடியா வந்து தான் கொடுப்பாங்க. அதுவும் எங்க வீட்டு விசேஷம்னா எல்லா நடிகர்களும் வந்து கலந்துக்குவாங்க. எங்க மூத்த சகோதரியோட கல்யாணத்துல சிவாஜி சார்தான் மாப்பிள்ளை தோழனா இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டாங்க. அதுக்கு காரணம் எங்கப்பா நடிகர் திலகத்தை கூடப்பொறக்காத தம்பியா தான் பாத்தாரு. அதே மாதிரி பெண்ணுக்கு தோழியா நடிகைங்க தான் இருந்து பாத்துக்கிட்டாங்க.
சிவாஜி சார் கூட அப்பா நடிச்சதுல மறக்க முடியாத படம் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் திருவிளையாடல் படத்துல அந்த திமிர் பிடிச்ச பாகவதரா நடிச்சது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார் ஜூனியர் பாலையா.
அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னாடி என்னை கூப்பிட்டு, நீ சினிமாவுல நடிக்கனும்னா என்ன பேர் வைக்கப்போறேன்னு கேட்டார். நான், நீங்க சொல்ற பேரையே வச்சிக்குறேன்னு சொன்னேன். அதுக்கு அவர்தான் ஜூனியர் பாலையான்னு வச்சிக்கோன்னு சொன்னாரு. ஏன்னா எனக்கு பின்னாடியும் எம்பேரு நிலைச்சி நிக்கணும் அதனால அந்த பேர வச்சிக்கோன்னு சொன்னாரு என்றார் ஜூனியர் பாலையா.