எம்ஜிஆரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது தெரியுமா? அவரைப்பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்!
சென்னை: எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரைப்பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? என மக்கள் அந்த நாளை நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
எம்.ஜி.ஆரை நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ மக்கள் பார்க்கவில்லை. அவரை, குடும்பத்தில் ஒருவராக, தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர்.

கேட்காமலே பல உதவி: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்... இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தார் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருக்கும்போதே நலிந்தவர்களுக்கு அவர்கள் கேட்காமலே பல உதவிகளை செய்தார். அவரால் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா? என்றெல்லாம் எம்ஜிஆர் எப்போதும் யோசித்தது இல்லை.
மக்களின் மனதில் இடம்: அநேகமான மக்களின் மனங்களைக் கவர்ந்த தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார். சத்துணவுத் திட்டம் போன்ற நேரடியாகப் பயனடையக்கூடிய திட்டங்களையே கொண்டு வந்தார். ரிக்ஷா தொழிலாளர்களுக்கு அன்றைய காலகட்டத்திலே ரூ.3 லட்சம் மதிப்பிலான உயர்தர மழை கோட்டுகளை வழங்கினார். அதே போல, ஏலத்திற்கு வந்த கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டை ஏலத்தில் இருந்து மீட்டுக்கொடுத்தார்.
மக்களின் இதயத்தில் இடம்: தனுஷ்கோடி புயல் நிவாரணம், கமலா சர்க்கஸ் தீ விபத்து நிவாரணம், மதுரை சரஸ்வதி பள்ளி தீ விபத்துக்கு அள்ளிக்கொடுத்த வள்ளல் அவர். மேலும், அவ்வை இல்லம், ஆந்திர மகிள சபா, பெங்களூரு அனாதை பள்ளியின் வளர்ச்சியில்எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. வயதானவர்கள், பெண்கள் மீது எம்ஜிஆர் உயர்ந்த கருத்துகளை கொண்டிருந்தார். அதற்காக தாய்க்குலத்திடம் அவருக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருந்தது.
சத்துணவுத் திட்டம்: தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் இருந்த எம்ஜிஆர், ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தார். அவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தார். சிறுவயதில் பசியால் தான் வாடியது போல, எந்த குழந்தைகளும் பசியோடிருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். தனது நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பு காரணமாக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர், கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். அவரது உடலுக்கு மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே நினைவிடம் உருவாக்கப்பட்டது. அந்த துயரமான நாளில் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











