டீசலில் தண்ணி.. இத்தனை லட்சம் செலவு.. விஜய் டிவி மா கா பா ஆனந்துக்கே பட்டை நாமம்.. என்னாச்சு?
சென்னை: விஜய் டிவியின் தொகுப்பாளராக மக்களிடம் பிரபலமானவர் மா கா பா ஆனந்த். அந்த சேனலில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் அவர்; சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் சின்னத்திரைதான் அவருக்கான பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் மா கா பா ஆனந்த். அது பலரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் வானொலியில் ஆர்ஜேவாக தனது பயணத்தை ஆரம்பித்தவர். முதலில் சூரியன் எஃப். எம்மில் வேலை பார்த்த அவர்; அதனையடுத்து ரேடியோ மிர்ச்சிக்கு சென்றார். சூரியன் எஃப். எம்மில் பணியாற்றியபோது அவரது பெயர் பிளேடு ஆனந்த். ஆனால் ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்க வேண்டுமென்றால் உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என கண்டிஷன் வர; மிர்ச்சி செந்திலின் வழிகாட்டுதலில் மா கா பா ஆனந்த்தாக மாறினார். மா கா பா என்றால் ஹிந்தியில் அம்மாவின் அப்பா என்று அர்த்தமாகும்.
விஜய் டிவியில் ஃபேமஸ்: தொடர்ந்து ரேடியோக்களில் ஆர்ஜேவாக தனது திறமையை நிரூபித்த அவருக்கு; விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சேனலில் சிறப்பாக பணியாற்றினால் தமிழ்நாடு முழுவதும் பிரலமாகலாம் என்ற விதி அவரது வாழ்க்கையிலும் நடந்தது. முதலில் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளிய அவர் தொடர்ந்து கிங்ஸ் ஆஃப் டான்ஸ், சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கலகலப்பும், இயல்பும்: அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே அலாதியாக இருக்கும் என்றும்; அவரது ஆங்கரிங்கில் நகைச்சுவையும், இயல்புத்தன்மையும் ரொம்பவே எதார்த்தமாக இருக்கும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோல் அவர் செய்யும் காமெடிகளில் எப்போதுமே அடுத்தவரது மனது நோகும் விஷயங்கள் இருக்காது, அவர் படபடவென்று பேசுவதே அழகுதான் எனவும் கொண்டாடுவதும் உண்டு.
சினிமாக்களில் ஆனந்த்: சின்னத்திரையில் ஜொலித்த அவருக்கு வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்துக்கு பிறகு நவரச திலகம், கடலை, அட்டி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படம்தான் அவரது நடிப்புக்கு கைத்தட்டல்களை பெற்றுக்கொடுத்தது.
மோசமான அனுபவம்: இந்நிலையில் அவரது காருக்கு சென்னை பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசலில் தண்ணீர் கலந்து ஊற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், "டீசலில் தண்ணீர் கலந்ததால் கார் பழுதாகி மூன்று லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. இதை ஆதாரத்தோடு நிரூபித்ததும்; நீதிமன்றத்துக்கு போக வேண்டாம். 80,000 ரூபாய் தருகிறோம் என அவர்கள் பேரம் பேசுகிறார்கள். உங்களை நம்பித்தானே வருகிறோம். ஆனால் இப்படி செய்தால் டீசலையும் மக்களே இனிமே தயாரிக்க வேண்டுமா?.. அந்த பங்க் மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications











